Tuesday 28 August 2012

16.அனைவரும்


அனைவரும ருண்ட ருண்டு கடிதெனவெ குண்டி யம்ப
        அமரஅடி பின்தொ டர்ந்து              பிணநாறும்
அழுகுபிணி கொண்டு விண்டு புழவுடனெ லும்ப லம்பு
        மவலவுட லஞ்சு மந்து                   தடுமாறி
மனைதொறுமி தம்ப கர்ந்து வரவரவி ருந்த ருந்தி
        மனவழிதி ரிந்து மங்கு                   வசைதீர
மறைசதுர்வி தந்தெ ரிந்து வகைசிறுச தங்கை கொஞ்சு
        மலரடிவ ணங்க என்று                  பெறுவேனோ
தினைமிசைசு கங்க டிந்த புனமயிலி ளங்கு ரும்பை
        திகழிருத னம்பு ணர்ந்த                  திருமார்பா
ஜெகமுழுது முன்பு தும்பி முகவனொடு தந்தை முன்பு
        திகிரிவலம் வந்த செம்பொன்          மயில்வீரா
இனியகனி மந்தி சிந்து மலைகிழவ செந்தில் வந்த
        இறைவகுக கந்த என்று                 மிளையோனே
எழுகடலு மெண்சி லம்பும் நிசிசரரும் அஞ்ச அஞ்சு
        மிமையவரை யஞ்ச லென்ற            பெருமாளே.

 பதம் பிரித்து உரை
அனைவரும் மருண்டு அருண்டு கடிது என வெகுண்டு இயம்ப
அமர அடி பின் தொடர்ந்து பிண நாறும்

அனைவரும் = (உற்ற நோயைக் கண்டு) யாவரும். மருண்டு = அச்சம் கொண்டு. அண்டு = மனக் குழப்பம் கொண்டு. கடிது என = (எம்மிடம் அணுகாதே) விரைவில் அகலுக என்று. வெகுண்டு இயம்ப = கோபித்துக் கூறி. அமர = நெருங்க. அடி பின் தொடர்ந்து = (விடாது)அவர்களைப் பின்னேயே தொடர்ந்து. பிண நாறும் = பிணம் போல் நாறுகின்றதும்.

அழுகு பிணி கொண்டு விண்டு புழு உடல் எலும்பு அலம்பும்
அவல உடலம் சுமந்து தடுமாறி

அழுகு பிணி கொண்டு = அழுகிப் போன நிலையைத் தருவதான நோய் கொண்டு. புழு விண்டு உடல் = புழு வெளிப்படும் உடலில். எலும்பு அலம்பு = எலும்புகள் நிலை குலையும்படி. அவல உடலம் சுமந்து = துன்ப உடலைச் சுமந்து. தடுமாறி = தடுமாற்றம் அடைந்து.

 மனை தொறும் இதம் பகர்ந்து வரவர விருந்து அருந்தி
 மன வழி திரிந்து மங்கும் வசை தீர

மனை தொறும் = வீடுகள் தோறும் (போய்). இதம் = இதமான மொழிகளை. பகர்ந்து = சொல்லி. வர வர = நாள் செல்லச் செல்ல. விருந்து அருந்தி = (புதிய இடங்களில்) உணவுகளை உண்டு. மன வழி திரிந்து= மனம் போன வழியில் சுற்றிஅலைந்து. மங்கும் = அழிகின்ற. வசை தீர = பழிப்பு நீங்க.

 மறை சதுர் விதம் தெரிந்து வகை சிறு சதங்கை கொஞ்சு
 மலர் அடி வணங்க என்று பெறுவேனோ

மறை சதுர் விதம் தெரிந்து = மறை நான்கின் வகைகளை அறிந்து.வகை சிறு சதங்கை கொஞ்சு = முறைப்படி சிறிய சதங்களைக் கொஞ்சுகின்ற. மலர் அடி வணங்க = உனது மலர் போன்ற திருவடிகளை வணங்கும் பாக்கியத்தை. என்று பெறுவேனோ = என்று பெறுவேனோ.

தினை மிசை சுகம் கடிந்த புன மயில் இளம் குரும்பை
 திகழ் இரு தனம் புணர்ந்த திரு மார்பா

தினை மிசை = தினை மீதிருந்த. சுகம் = கிளிகளை. கடிந்த = ஓட்டிய. புன மயில் = புனத்திலிருந்த. இளம் குரும்பை திகழ் = தென்னங் குரும்பை போன்று விளங்கும். இரு தனம் புணர்ந்த = இரண்டு கொங்கைகளைஅணைந்த. திரு மார்பா = அழகிய மார்பனே.

 ஜெக முழுதும் முன்பு தும்பி முகவனொடு தந்தை முன்பு
 திகிரி வலம் வந்த செம் பொன் மயில் வீரா

ஜெகம் முழுதும் = உலகம் முழுமையும். முன்பு = முன்பு. தும்பி முகவனொடு = யானை முகத்தோனாகிய விநாயகனோடு. தந்தை முன்பு = தந்தையாகிய சிவபெருமானின் முன்னிலையில். திகிரி = சக்ரவாள கிரியை. வலம் வந்த = சுற்றி வந்த. செம் பொன் மயில் வீரா = செம் பொன் மயில் வீரனே.

 இனிய கனி மந்தி சிந்து மலை கிழவ செந்தில் வந்த
 இறைவ குக கந்த என்றும் இளையோனே

இனிய கனி = இனிமையான பழங்களை. மந்தி = குரங்குகள். சிந்து = சிந்துகின்ற. மலை கிழவ = மலைகளுக்கு உரிமை கொண்டவனே. செந்தில் வந்த இறைவ = திருச்செந்தூரில் வந்து அமர்ந்த இறைவனே. குக = குகனே. கந்த = கந்தனே. என்றும் இளையோனே = எப்பொழுதும் இளைமையாக இருப்பவனே.

 எழு கடலும் எண் சிலம்பும் நிசிசரரும் அஞ்ச அஞ்சும்
 இமயவரை அஞ்சல் என்ற பெருமாளே.

எழு கடலும் = ஏழு கடல்களும். எண் சிலம்பும் = எட்டு மலைகளும். நிசிசரரும் = அசுரர்களும். அஞ்ச = பயப்படும்படி. அஞ்சும் இமையவரை = பயம் கொண்டிருந்த தேவர்களை. அஞ்சல் என்ற பெருமாளே = அஞ்ச வேண்டாம் என்று அபயம் அளித்த பெருமாளே.

சுருக்க உரை
தமக்கு உற்ற பெரு நோயைக் கண்டு, யாவரும் அச்சம் கொண்டு, அருகில் வர வேண்டாம் என்று கோபித்துக் கூறி விரட்டவும், விடாது அவர்களைத் தொடர்ந்து, துர் நாற்றம் வீசும் உடலைச் சுமந்து, நான் தடுமாற்றம் அடைந்து பல வீடுகளுக்குப் போய் உணவு அருந்தி, மனம் போகும் வழியில் சென்று திரிகின்ற பழிப்பு நீங்க, நான்கு வேதங்களை அறிந்து, உன் மலரடிகளை வணங்கும் பேற்றை நான் பெறுவேனோ.

தினைப்புனத்தில் கிளிகளை ஓட்டும் வள்ளியின் இரண்டு தனங்களை அணைந்த அழகிய மார்பனே. உலகத்தைத் தம்பியாகிய யானை முகனுடன் போட்டி இட்டு சிவபெருமான் முன் சுற்றி வந்த மயில் வீரா.ஏழு கடலும், எட்டு மலைகளும், அசுரர்களும் பயப்படும்படி தேவர்களை அஞ்ச வேண்டாம் என்று அபயம் அளித்த குகனே, கந்தனே. தேவர்கள் பெருமாளே. உன் மலர் அடி என்று பெறுவேனோ.

விளக்கக் குறிப்புகள்
அ. அவைரும் மருண்டு அருண்டு கடிதென.....
(அக்கைபோல் அங்கை ஒழிய விரலழுகித்
துக்கத் தொழுநோய் எழுபவே அக்கால்
அலவனைக் காதலித்துக் கான்முரித்துத் தின்ற
பழவினை வந்தடைத்தக் கால்) - நாலடியார் 123. (அலவன்= நண்டு).
ஆ. மனைதொறு மிதம் பகர்ந்து வரவர விருந்தருந்தி....
(அசனமிடுவார்கள் தங்கள் மனைகள் தலைவாசல் நின்று
அநுதினமும் நாணமின்றி அழிவேனோ).... திருப்புகழ்
(கருவினுருவாகி)
இ. மலரடி வணங்க என்று பெறுவேனோ....
(பெறுதற் கரிய பிறவியைப் பெற்றுநின் சிற்றடியைக்
குறுகிப் பணிந்து பெறக் கற்றிலேன்)---- கந்தர் அலங்காரம் 67. 

No comments:

Post a Comment

Your comments needs approval before being published