Tuesday 4 September 2012

36. நாலு மைந்து


நாலு மைந்து வாசல்கீறு தூறு டம்பு கால்கையாகி
        நாரி யென்பி லாகுமாக                         மதனூடே
நாத மொன்ற ஆதிவாயில் நாட கங்க  ளானஆடி
        நாட றிந்தி டாமலேக                            வளராமுன்
நூல நந்த கோடிதேடி மால்மி குந்து பாருளோரை
        நூறு செஞ்சொல் கூறிமாறி                  விளைதீமை
நோய்க லந்த வாழ்வுறாமல் நீக லந்து ளாகுஞான
        நூல டங்க வோதவாழ்வு                      தருவாயே
காலன் வந்து பாலனாவி காய வென்று பாசம்வீசு
        காலம் வந்து வோலமோல                   மெனுமாதி
காம னைந்து பாணமோடு வேமி னென்று காணுமோனர்
        காள கண்ட ரோடுவேத                       மொழிவோனே
ஆல மொன்று வேலையாகி யானை யஞ்சல் தீருமூல
        ஆழி யங்கை ஆயன்மாயன்                  மருகோனே
ஆர ணங்கள் தாளைநாட வார ணங்கை மேவுமாதி
        யான செந்தில் வாழ்வதான                  பெருமாளே.

- திருச்செந்தூர்

பதம் பிரித்து பதவுரை

நாலும் ஐந்து வாசல் கீறு தூறு உடம்பு கால் கை ஆகி
நாரி என்பில் ஆகும் ஆகம் அதன் ஊடே

நாலும் ஐந்து வாசல் = ஒன்பது வாயில்கள் கீறு = வகுக்கப்பட்ட.தூறு
உடம்பு = பழிச் சொல்லுக்கு இடமாகிய உடம்பு கால் கை ஆகி = காலும் கையும் கொண்டு நாரி = (ஒரு) பெண்ணின் என்பில் = உடலில்  ஆகும் = இடம் பெற்று வந்த ஆகம் அதன் ஊடே = உடம்பின் உள்ளே.

நாதம் ஒன்ற ஆதி வாயில் நாடகங்கள் ஆன ஆடி
நாடு அறிந்திடாமல் ஏக வளரா முன்

நாதம் ஒன்ற = இந்திரியம் பொருந்த ஆதி வாயில் = முதலிருந்தே (ஐம்பொறிகளின்) வழியே நாடகங்களான ஆடி = (பலவித) கூத்துக் களை ஆடி நாடு அறிந்திடாமல் = ஊரார் அறியாதபடிஏக = 
போவதற்கே (மாய்வதற்கு) வளராமுன் = வளர்வதற்கு முன்னே.

நூல் அநந்த கோடி தேடி மால் மிகுந்து பார் உளோரை
நூறு செம் சொல் கூறி மாறி விளை தீமை

நூல் அநந்த கோடி தேடி = கணக்கற்ற நூல்களைத் தேடி மால் மிகுந்து = (பொருள்) ஆசை மிகுந்து பார் உளோரை = உலகில் உள்ளவர்களை நூறு செம் சொல் கூறி = நூற்றுக் கணக்கான செவ்விய சொற்களால் புகழ்ந்து மாறி = சோர்வுற்று விளை தீமை = (அதனால்) விளையும் கெடுதல்களும்.

நோய் கலந்த வாழ்வு உறாமல் நீ கலந்து உ(ள்)ளாகு(ம்) ஞான
நூல் அடங்க ஓத வாழ்வு தருவாயே

நோய் கலந்த வாழ்வு உறாமல் = நோய்களும் கலந்த இந்த
வாழ்க்கையை (நான்) அடையாமல் நீ கலந்து = நீ என் உள்ளத்தில் கலந்து உள்ளாகும் = என்னுள்ளேயே வீற்றிருக்கும்ஞான நூல் =ஞான
நூல்கள் அடங்க = முழுமையும் ஓத = ஓதும்படியான வாழ்வு தருவாயே = நல் வாழ்வைத் தந்து அருள்க.

காலன் வந்து பாலன் ஆவி காய வென்று பாசம் வீசு
காலம் வந்து ஓலம் ஓலம் என்னும் ஆதி

காலன் வந்து = யமன் வந்து பாலன் ஆவி = பாலனாகிய மார்க்கண்டேயனின் உயிரை. காயவென்று = கவர்வதற்காக பாசம் வீசு = பாசக் கயிற்றை வீசுவதற்கு காலம் வந்து = சமயத்தில் வெளி வந்து ஓலம் ஓலம் என்னும் = அபயம் தந்தோம் அபயம் தந்தோம் என்று கூறிய. ஆதி = மூலப் பொருளானவர்.

காமன் ஐந்து பாணமோடும் வேமின் என்று காணும் மோனர் 
காள கண்டரோடு வேதம் மொழிவோனே

காமன் ஐந்து பாணமோடு = மன்மதன் தனது ஐந்து மலர்ப் பாணங் களோடு வேமின் என்று =  வெந்து போகும்படி காணும் = கண்ட மோனர் = மௌன விரதம் பூண்டவரும் காள கண்டரோடு = கறுத்த கழுத்தை உடையவரும் ஆகிய சிவபெருமானுக்கு வேதம் மொழிவோனே = வேதப் பொருளை உரைத்த குருவே

ஆலம் ஒன்று(ம்) வேலையாகி யானை அஞ்சல் தீரும் மூல
ஆழி அம் கை ஆயன் மாயன் மருகோனே

ஆலம் ஒன்றும் = ஆலகால விடம் தோன்றிய வேலையாகி = கடலில் பள்ளி கொண்டவாராகி யானை அஞ்சல் = கஜேந்திரனாகிய யானையின் பயத்தை  தீரும் மூல = தீர்த்தருளிய மூல மூர்த்தி ஆழி அம் கை = சக்கராயுதத்தை அழகிய கையில் ஏந்திய  ஆயன் = இடையர்
குலத்தைச் சேர்ந்த மாயன் மருகோனே = மாயோனுக்கு மருகனே.

ஆரணங்கள் தாளை நாட வாரணம் கை மேவும் ஆதியான
செந்தில் வாழ்வு அதான பெருமாளே.

ஆரணங்கள் = வேதங்கள் தாளை நாட = திருவடிகளைத் தேட  வாரணம் 
கை மேவும் = கோழிக் கொடியைக் கையில் கொண்ட  ஆதி ஆன = முதல்வராகிய பெருமாளே செந்தில் வாழ்வதான பெருமாளே = திருச் செந்தூரில் வாழ்ந்தருளும் பெருமாளே.

சுருக்க உரை

ஒன்பது வாயில்கள் வகுக்கப்பட்டதும், பழிகளுக்கு இடமானதும், கை கால்கள் கொண்டதுமான இந்த உடம்பு, முதலிருந்தே ஐம்பொறிகளின் வசப்பட்டு, பலவிதக் கூத்துக்களை ஆடி, யாரும் அறியாமல் மாய்வதற்கு என்றே வளருவதற்கு முன்னர், கணக்கற்ற நூல்களைக் கற்று, ஆசை மிகுந்து, பொருள் தேடி, உலகோரைப் புகழ்ந்து பயன் அடையாமல், சோர்வுற்று, அதனால் பல கெடுதல்களும், நோய்களும் நான் அடையாமல், நீ என்னுள்ளத்தில் புகுந்து அங்கேயே வீற்றிருந்து, ஞான நூல்கள் முழுமையும் ஓதும்படியான வாழ்வைத் தந்து அருள்வாய்.

மார்க்கண்டேயனின் உயிரைக் கவர்வதற்குக் காலன் வந்த போது, தக்க சமயத்தில் வந்து, அபயம் தந்தேன் என்று கூறிய மூலப் பொருளும்,
மன்மதனை எரித்தவரும், கறுத்த கண்டத்தை உடையவரும் ஆகிய சிவபெருமானுக்கு வேதப் பொருளை உரைத்தவரே, விடம் தோன்றிய கடலில் பள்ளி கொள்பவரும், சக்கரத்தைக் கையில் ஏந்தியவரும், இடையர் குலத்தைச் சேர்ந்தவருமாகிய திருமாலின் மருகனே, வேதங்களும் திருவடியைத் தேட, கோழிக் கொடியைக் கையில் ஏந்திய முதல்வனே, திருச்செந்தூரில் வாழ்ந்தருளும் பெருமாளே, நான் ஞான நூல்களை ஓத அருள் புரிவாயாக.

உடம்புடன் கூடித் துன்புறாமல் ஞான வாழ்வை அருள்வீர் என சிவகுருவானவரும், மாயோன் மருகனுமாகிய செந்தில் ஆண்டவரை வேண்டுகிறார் இந்த துதியில்

No comments:

Post a Comment

Your comments needs approval before being published