நிலையாப் பொருளை
யுடலாக் கருதி
நெடுநாட் பொழுது மவமேபோய்
நிறைபோய்ச்
செவிடு குருடாய்ப் பிணிகள்
நிறைவாய்ப் பொறிகள் தடுமாறி
மலம்நீர்ச்
சயன மிசையாப் பெருகி
மடிவேற் குரிய நெறியாக
மறைபோற் றரிய
வொளியாய்ப் பரவு
மலர்தாட் கமல மருள்வாயே
கொலைகாட் டவுணர்
கெடமாச் சலதி
குளமாய்ச் சுவற முதுசூதம்
குறிபோய்ப்
பிளவு படமேற் கதுவு
கொதி வேற் படையை விடுவோனே
அலைவாய்க் கரையின்
மகிழ்சீர்க் குமர
அழியாப் புநித வடிவாகும்
அரனார்க் கதித
பொருள்காட் டதிப
அடியார்க்கெளிய பெருமாளே.
- திருச்செந்தூர்
பதம்
பிரித்து பதவுரை
நிலையா பொருளை உடலா கருதி
நெடு நாள் பொழுதும் அவமே போய்
நிலையா = நிலை இல்லாத, பொருளை = பொருளை உடலாக் கருதி = பொன்னாக நினைத்து நெடு நாள் பொழுதும் =
நெடிய நாட்களை எல்லாம் அவமே போய் = வீணாகச் செலவழித்து.
நிறை போய் செவிடு குருடாய் பிணிகள்
நிறைவாய் பொறிகள் தடுமாறி
நிறை போய் = (மனதின்) திண்மை போய் செவடு குருடாய் = காது செவிடாகவும், கண்கள் குருடாகவும் பிணிகள் நிறைவாய்=நோய்கள் நிறைந்தும் பொறிகள் தடுமாறி = ஐம்பொறிகளும் தடுமாற்றம் அடைந்தும்.
மல(ம்) நீர் சயனம் மிசையா பெருகி
மடிவேற்கு உரிய நெறியாக
மலம் சீர் = மலமும், நீரும் சயனம்
மிசையா பெருக = படுக்கையிலேயே பெருகி மடிவேற்கு
= இறந்து படுவேனுக்கு உரிய நெறியாக = உரிய (முத்தி) விதியாக.
மறை போற்ற அரிய ஒழியாய் பரவு
மலர் தாள் கமலம் அருள்வாயே
மறை போற்ற அரிய = வேதங்கள் போற்றுதற்கு அரிதான ஒளியாய்
= ஒளியாக பரவு = விரிந்துள்ள மலர்
தாள் கமலம் = தாமரைத் திருவடியை அருள்வாயே
= எனக்கு அருள்வாயாக.
கொலை காட்டு அவுணர் கெட மா சலதி
குளமாய் சுவற முது சூதம்
கொலை காட்டு அவுணர் = கொலையையே செய்து வருகின்ற
அசுரர்கள். கெட = கெட்டு அழிய மா = பெரிய சலதி குளமாய் சுவற = கடல் வற்றிக் குளம் போலக் காணப்பட முது சூதம் = முதிர்ந்த (சூரனாகிய) மாமரம்.
குறி போய் பிளவுபட மேல் கதுவு(ம்)
கொதி வேல் படையை விடுவோனே
குறி
போய்ப் பிளவுபட = குறியின்படியே பட்டுப் பிளவுபட மேல்
கதுவும் = மேலே பற்றும்படியாக கொதி
= எரி வீசும் வேல் படையை = வேலாயுதத்தை
விடுவோனே = செலுத்தியவனே
அலையாய் கரையின் மகிழ் சீர் குமர
அழியா புநித வடிவாகும்
அலைவாய்க்
கரையில் = திருச்செந்தூர்க் கடற்கரையில் மகிழ்
சீர்க் குமர = மகிழ்கின்ற அழகிய குமரனே அழியா
= அழிவில்லாத புநித வடிவாகும்
= பரிசுத்த உருவம் கொண்ட
அரனார்க்கு அதித பொருள் காட்டு அதிப
அடியார்க்கு எளிய பெருமாளே.
அரனார்க்கு = சிவபெருமானுக்கு அதித
பொருள் காட்டும் அதிப = எல்லாம் கடந்த பொருளை விளக்கிக் காட்டிய தலைவனே அடியார்க்கு எளிய பெருமாளே = அடியவர்களுக்கு எளியவராகிய
பெருமாளே.
நிலையில்லாத உடலைப் பொன்னாக நினைத்து,
நாட்களை வீணாகச் செலவிட்டு,
மனதின் திண்மை போய், காது செவிடாகி, கண்கள் குருடாகி,
ஐம்பொறிகளும் தடுமாறி, மலமும் நீரும்
படுக்கையிலேயே கழித்து, இறந்து படவேனுக்கு, உரிய முத்தி நெறியாகிய, வேதங்களும் போற்றுதற்கு
அரிய உனது திருவடித் தாமரையைத் தந்து அருள்வாயாக.
கொலைத் தொழிலையே புரியும் அசுர்கள் அழிய,
கடல் வற்ற, சூரனாகிய
மாமரம் பிளவு பட, எரிவீசும் வேலாயுதத்தைச்
செலுத்தியவனே, திருச் செந்தூர்க்
கடற்கரையில் மகிழும் குமரனே, அழியாதவரும்
பரிசுத்தமானவரும் ஆகிய சிவபெருமானுக்கு எல்லாம் கடந்த மெய்ப் பொருளை விளக்கிய தலைவனே, அடியார்க்கு எளிய பெருமாளே.
No comments:
Post a Comment
Your comments needs approval before being published