படர்புவியின் மீது மீறி வஞ்சகர்கள்
வியனினுரை பானு வாய்வி யந்துரை
பழுதில்பெரு சீல நூல்க ளுந்தெரி சங்கபாடல்
பனுவல்கதை காவ்ய மாமெ ணெண்கலை
திருவளுவ தேவர் வாய்மை யென்கிற
பழமொழியை யோதி யேயு ணர்ந்துபல் சந்தமாலை
மடல்பரணி கோவை யார்க லம்பக
முதலுளது கோடி கோள்ப்ர பந்தமும்
வகைவகையி லாசு சேர்பெ ருங்கவி சண்டவாயு
மதுரகவி ராஜ னானென் வெண்குடை
விருதுகொடி தாள மேள தண்டிகை
வரிசையொ டுலாவு மால கத்தைத விர்ந்திடாதோ
அடல்பொருத பூச லேவி ளைந்திட
எதிர்பொரவொ ணாம லேக சங்கர
அரஹர சிவாம ஹாதெ வென்றுனி அன்றுசேவித்
தவனிவெகு கால மாய்வ ணங்கியு
ளுருகிவெகு பாச கோச சம்ப்ரம
அதிபெல கடோர மாச லந்த்ர ணொந்துவீழ
உடல்தடியு மாழி தாவவெ னம்புய
மலர்கள் தச நூறு தாளி டும்பக
லொருமலரி லாது கோவ ணிந்திடு செங்கண்மாலுக்
குதவிய கேசர் பால இந்திரன்
மகளை மண மேவி வீறு செந்திலி
லுரியஅடி யேனை யாள வந்தருள் தம்பிரானே.
- திருச்செந்தூர்
பதம் பிரித்து பதவுரை
படர் புவியின் மீது மீறி வஞ்சகர்கள்
வியனில் உரை பானுவாய் வியந்து உரை
பழுது இல் பெரு சீல நூல்களும் தெரி சங்க
பாடல்
படர் புவியின் மீது = பரந்துள்ள இப்பூமியில் மீறி = அளவுக்கு மிஞ்சி வஞ்சகர்கள் = வஞ்சனை உள்ள (உலோபியர்களிடம்) வியனின் உரை = (பொருள் பெறுதற்கு அவர்களைச்) சிறப்பாகச் சொல்லப்பட்ட பானுவாய் = சூரியனே என்று வியந்து உரை = பாராட்டிக் கூறியும் பழுது இல் = குற்றம் இல்லாத பெரு = பெரிய. சீல நூல்களும் = உயரிய நூல்களையும் தெரி = கிடைத்துள்ள சங்க பாடல = சங்க நூல் பாடல்களையும்.
பனுவல் கதை காவ்யமாம் எண் எண் கலை
திருவ(ள்)ளுவ தேவர் வாய்மை என்கிற
பழமொழியை ஓதியே உணர்ந்து பல் சந்த மாலை
பனுவல் கதை காவ்யம் ஆம் = (வேறு) நுல்களையும் கதைகளையும், காப்பியங்களையும் எண் எண் கலை = அறுபத்து நான்கு கலை நூல்களையும் திருவள்ளுவ தேவர் வாய்மை என்கிற =
திருவள்ளுவ தேவர்
வாய்மை எனப்படும்
பழ மொழியை = பழமொழி நூல்களையும் ஓதியே உணர்ந்து = ஓதியும் உணர்ந்தும் பல் சந்த மாலை = பல வகையான சந்த மாலைச் செய்யுட்கள்.
மடல் பரணி கோவை ஆர் கலம்பகம் முதல்
உளது கோடி கோள் ப்ரபந்தமும்
வகைவகையில் ஆசு சேர் பெரும் கவி சண்ட வாயு
மடல் பரணி கோவை ஆர் கலம்பகம் முதல் உளது
= மடல் முதலான
கோடி கோள் = கோடிக் கணக்கைக் கொண்ட ப்ரபந்தமும் வகை வகையில் = பிரபந்த வகைகளை ஆசு சேர் பெருங்கவி = ஆசுப் பெருங் கவி சண்ட வாயு = சண்டவாயு.
மதுரகவி ராஜன் நான் என்(று) வெண் குடை
விருது கொடி தாள மேள தண்டிகை
வரிசையொடு உலாவு மால் அகந்தை தவிர்ந்திடாதோ
மதுர
கவி ராஜன் நான் = மதுர கவி ராஜன் நானே என்று (பட்டப் பெயர்களை வைத்துக் கொண்டு) வெண் குடை = வெண் குடை விருது
கொடி = வெற்றிக் கொடி தாள மேள தண்டிகை = தாளம், மேளம், பல்லக்கு முதலான வரிசையொடு உலாவும் = சிறப்புச் சின்னங்களோடு உலவி வரும் மால் = மயக்க அறிவும் அகந்தை = அகங்காரமும் தவிர்ந்திடாதோ = தவிராவோ?
அடல் பொருத பூசலே விளைந்திட
எதிர் பொர ஒணாமல் ஏக சங்கர
அரஹர சிவா மஹா தேவ என்று உ(ன்)னி அன்று
சேவித்து
அடல் பொருத = (சலந்தராசுரனுடன்) வலிமையுடன் போர் செய்து பூசலே விளைந்திட = பெரிய ஆரவாரம் உண்டாக எதிர் பொர
ஒணாமல்= அவனுடன் எதிர்த்து போர் செய்ய முடியாமல் ஏக = ஏகனே சங்கர அரஹர
சிவா மஹாதேவா என்று = சங்கரா, அரகர சிவ மகா தேவா என்று ஊ(ன்)னி = தியானித்து அன்று
சேவித்து = அன்று தொழுது.
அவனி வெகு காலமாய் வணங்கி
உள் உருகி வெகு பாச கோச சம்ப்ரம
அதி பெல கடோர மா சலந்த்ரன் நொந்து வீழ
அவனி = பூமியல் வெகு காலமாய் வணங்கி = அநேக காலமாய்
வணங்கி உள்
உருகி = மனம் உருகி வெகு பாச கோச = கொடிய பாசக் கயிறும் கவசமும்
சம்ப்ரம
= ஆடம்பரம் அதி பெல கடோர = மிக்க வலிமையும் கொடுமையும் உள்ள மா சலந்தரன் நொந்து வீழ
= பெரிய சலந்தராசுரன் வருந்தி
வீழ.
உடல் தடியும் ஆழி தா என அம் புய
மலர்கள் தச நூறு தாள் இடும் பகல்
ஒரு மலர் இல்லாது கோ அணிந்திடு செம்
கண் மாலுக்கு
உடல் தடியும் = (அவனுடைய) உடலைத் தறித்த ஆழி
தா என = சக்கரத்தைத் தந்தருள் என்று அம்புய மலர்கள் = தாமரை
மலர்கள் தச நூறு = ஆயிரம் கொண்டு தாள் இடும் பகல் = (சிவனுடைய) திருப்பாதங்களில் பூசித்து வந்த அந்த நாட்களில் (ஒரு நாள்) ஒரு மலர் இலாது = ஒரு மலர் இல்லாத குறைய கோ அணிந்திடு = (அதற்கு ஈடாகத் தன்) கண்ணையே அணைந்திட்ட செம் கண் மாலுக்கு
=
சிவந்த கண்ணுடைய திருமாலுக்கு.
உதவிய மகேசர் பால இந்திரன்
மகளை மணம் மேவி வீறு செந்திலில்
உரிய அடியேனை ஆள வந்து அருள் தம்பிரானே.
உதவிய மகேசர் = உதவி செய்த மகா தேவருடைய பால
= குழந்தையே இந்திரன் மகளை
= இந்திரன் பெண்ணாகிய தேவசேனையை மணம் மேவி = திருமணம் செய்து கொண்டு வீறாக = விளங்கும் செந்திலில்
= திருச்செந்தூரில் உரிய
= (உன்னிடம்) உரிமை பூண்ட அடியேனை = அடியேனாகிய என்னை வந்து
அருள் தம்பிரானே = வந்து ஆள வந்தருளும் தம்பிரானே.
சுருக்க
உரை
இந்த உலகில் மிகவும் வஞ்சனை உள்ள உலோபியர்களிடம்
சென்று பொருள் பெற வேண்டி, அவர்களைச் சூரியனே என்று வியந்து உரைத்தும், குறையில்லாத
உயரிய நூல்களையும், மற்ற சங்க நூல்களையும், திருக்குறளையும், கோடிக் கணக்காண பிரபந்த
வகைகளையும் பாடித், தம்மைப் ஆசு கவி, மதுர கவி, சண்டவாயு என்றெல்லாம் பட்டப் பெயர்களைச்
சூடிக் கொண்டு, கொடி, மேள, தாளம் முதலிய ஆடம்பரங்களுடன்
உலவி வரும் அகங்காரத்தை நான் தவிர்ப்பேனாக.
சலந்தராசுரனை அழித்த சக்கரத்தைத் தனக்கு
அளிக்குமாறு கேட்ட திருமாலுக்கு அங்ஙனமே தந்து உதவிய மகா தேவனுக்குக் குழந்தையே. இந்திரன்
மகளான தேவசேனையை மணந்து, திருச்செந்தூரில் அடியேனை ஆள வந்தருளும் தம்பிரானே. என் அகந்தை
என்னை விட்டு அகல அருள்புரிவாயாக.
விளக்கக்
குறிப்புகள்
அ. அதி பெல கடோர மாச லந்தரன் நொந்து வீழ.....
மஹாவிஷ்னுவின் கையில் இருந்த
சக்கராயுதம் தேய்ந்து போனபோது,
ஆற்றல் பொருந்திய சக்கரம் பெறுவதற்காக மஹாவிஷ்னு சிவபெருமானை
பூஜித்ததாக பல்வேறு புராணத் தகவல்கள் உண்டு. அப்படி சிவபெருமானை விஷ்னு பூஜித்ததாக
திருமாற்பேறு, திருப்பைஞ்ஞீலி,
திருவீழிமிழலை ஆகிய சிவஸ்தலங்களின் தல புராண வரலாறுகள் கூறுகின்றன.
இம்மூன்று தலங்களில் திருவீழிமிழலை மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. திருமாலுக்கு
சலந்திரனைச் சம்ஹரிக்கச் சக்கரம் தேவைப்படுகிறது. அதைப் பெருவதற்காக திருவீழிமிழலையில்
சிவபெருமானிடம் வருகிறார். ஆயிரம் தாமரை மலர்களால் சிவனை அர்ச்சித்தால் என்னியது கிடைக்கும்
என்று அறிகிறார். அதன்படி ஆயிரம் தாமரை மலர்கள் சேர்த்து அர்ச்சனை செய்ய ஆரம்பித்து
999 மலர்களால் அர்ச்சனை செய்து விடுகிறார். ஆயிரமாவது மலர் இல்லை. இன்னொரு தாமரை மலரைக்
கொண்டு வந்து அர்ச்சனையை தொடர நேரமும் இல்லை. குறைந்த ஒரு மலருக்குப் பதிலாக தாமரை
மலருக்கு ஒப்பான தனது இரு கண்களில் ஒன்றையே பெயர்த்து எடுத்து பூஜையை குறை இல்லாமல்
முடித்தவுடன் சிவனும் காட்சி கொடுத்து திருமால் விரும்பியபடி அவருக்கு சக்கராயுதம்
கொடுத்து அருள் செய்கிறார். இப்படி மஹாவிஷ்னு தன் கண்ணையே கொடுத்து சிவனை அர்ச்சித்த
தலம் தான் திருவீழிமிழலை. ( ஸ்தல திருப்புகழ் பாடல் எருவாய் கருவாய் – 274 )
நீற்றினை நிறையப்
பூசி, நித்தல்ஆ
யிரம்பூக் கொண்டு
ஏற்றுழி யொருநா
ளொன்று குறையக்கண் நிறைய விட்ட
ஆற்றலுக் காழி
நல்கி, யவன்கொணர்ந்
திழிச்சங் கோயில்
வீற்றிருந்
தளிப்பர் வீழி மிழலையுள் விகிர்தனாரே.- திருநாவுக்கரசர்
தேவாரம்
ஆ. மடல் பரணி கோவை யார் கலம்பகம் முதல்.....
(வஞ்சக லோப மூடர் தம்பொரு ளூர்கள் தேடி
மஞ்சரி கோவை தூது பலபாவின்
வண்புகழ் பாரி காரி யென்றிசை வாது கூறி
வந்தியர் போல வீணில் அழியாதே)...திருப்புகழ்
(வஞ்சகலோப)
No comments:
Post a Comment
Your comments needs approval before being published