பூரண வாரகும்ப சீதப டீரகொங்கை
மாதர் விகாரவஞ்ச லீலையி லேயுழன்று
போதவ மேயிழந்து போனது மானமென்ப தறியாத
பூரிய னாகிநெஞ்சு காவல்ப டாதபஞ்சு
பாதக னாயறஞ்செ யாதடி யோடிறந்து
போனவர் வாழ்வுகண்டு மாசையி
லேயழுந்து மயல்தீரக்
காரண காரியங்க ளானதெ லாமொ ழிந்து
யானெனு மேதைவிண்டு பாவக மாயிருந்து
காலுட லூடியங்கி நாசியின்
மீதிரண்டு விழிபாயக்
காயமு நாவுநெஞ்சு மோர்வழி யாகஅன்பு
காயம் விடாம லுன்ற னீடிய தாள்நினைந்து
காணுதல் கூர்த வஞ்செய் யோகிக ளாய்விளங்க அருள்வாயே
ஆரண சாரமந்த்ர வேதமெ லாம்விளங்க
ஆதிரை யானைநின்று தாழ்வனெ
னாவணங்கு
மாதர வால்விளங்கு பூரண ஞானமிஞ்சு முரவோனே
ஆர்கலி யூடெழுந்து மாலடி வாகிநின்ற
சூரனை மாளவென்று வானுல காளுமண்ட
ரானவர் கூரரந்தை தீரமு னாள்மகிழ்ந்த முருகேசா
வாரண மூலமென்ற போதினி லாழிகொண்டு
வாவியின் மாடிடங்கர் பாழ்பட
வேயெறிந்த
மாமுகில் போலிருண்ட மேனிய
னாமுகுந்தன் மருகோனே
வாலுக மீதுவண்ட லோடிய காலில்வந்து
சூல்நிறை வானசங்கு மாமணி யீனவுந்து
வாரிதி நீர்பரந்த சீரலை வாயுகந்த பெருமாளே.
- திருசெந்தூர்
பதம் பிரித்து உரை
பூரண வார கும்ப சீத படீர கொங்கை
மாதர் விகார வஞ்ச லீலையிலே உழன்று
போது அவமே இழந்து போனது மானம் என்பது அறியாத
*********
போது = பொழுதை அவமே = வீணாக இழந்து = இழந்து போனது மானம் என்பது
= மானம் போய் விட்டது என்பதை (கூட) அறியாத = அறியாத.
பூரியனாகி நெஞ்சு காவல் படாத பஞ்ச
பாதகனாய் அறம் செய்யாதபடி ஓடி இறந்து
போனவர் வாழ்வு கண்டும் ஆசையிலே அழுந்து மயல் தீர
பூரியன் ஆகி = கீழ் மகனாகி நெஞ்சு = மனம் காவல் படாத = கட்டுக்கு அடங்காத பஞ்ச பாதகனாய் = ஐம்பெரும் பாதகங்களைச் செய்தவனாக அறம் செய்யாது = தருமமே செய்யாமல் அடியோடு இறந்து போனவர் = அடியோடு இறந்து போனவர்களுடைய வாழ்வு கண்டு = வாழ்வைப் பார்த்தும் ஆசையிலே அழுந்து = ஆசையில் அழுந்தும் மயல் தீர = (எனது) மயக்கம் ஒழியும்படி
காரண காரியங்கள் ஆனது எல்லாம் ஒழிந்து
யான் எனும் மேதை விண்டு பாவகமாய் இருந்து
கால் உடல் ஆடி அங்கி நாசியின் மீது இரண்டு விழி பாய
காரண காரியங்கள் ஆனது = காரணம், காரியம் ஆகிய நிகழ்ச்சிகளில் எல்லாம் ஒழிந்து = எல்லாம் ஒழிந்து யான் என்னும் மேதை = நான் என வரும் ஆணவம் விண்டு = நீங்கி பாவகமாய் இருந்து = தூயவனாக இருந்து கால் உடலூடு இயங்கி = பிராண வாயு உடலின் பல பாகங்களுக்கு ஓடி நாசியின் மீது = மூக்கின் மேல் இரண்டு விழி பாய =
இரண்டு முனைகளும் பாய.
காயமும் நாவும் நெஞ்சும் ஓர் வழியாக அன்பு
காயம் விடாமல் உன்றன் நீடிய தாள் நினைந்து
காணுதல் கூர் தவம் செய் யோகிகளாய் விளங்க அருள்வாயே
காயமும் நாவும் நெஞ்சும்=காயம், வாக்கு, மனம் என்னும்
மூன்றும். ஓர் வழியாக= ஒரு வழிப்பட அன்பு = அன்பை காயம் விடாமல் = உடலுள்ள அளவும் விடாமல் உன்றன் நீடிய தாள் நினைந்து
= உனது அழிவற்ற திருவடிகளை நினைந்து காணுதல் = காட்சியைப் பெறுவதற்கு கூர் = மிக்க தவம் செய் = தவத்தைச் செய்கின்ற யோகிகளாய் விளங்க = யோகிகளாய் நான் விளங்கும்படி. அருள்வாயே = அருள் புரிவாயாக.
ஆரணசார மந்திர வேதம் எல்லாம் விளங்க
ஆதிரையானை நின்று தாழ்வன் எனா வணங்கும்
ஆதரவால் விளங்கு பூரண ஞானம் மிஞ்சு முரவோனே
ஆரண சார மந்திர = வேதாசாரமான மந்திரங்களும் வேதம் எல்லாம் விளங்க = வேதங்களில் அடங்கியுள்ள
இரகசியங்களையெல்லாம் விளங்கும் படியாக. (தேவாரப் பாக்களால்) ஆதிரையானை = திருவாதிரை நாளுக்கு உகந்தவனான சிவபெருமானை நின்று தாழ்வன் எனா = எதிர் நின்று வணங்குவேன் என்று வணங்கும் = (உலகுக்குக் காட்டி) வணங்கும் ஆதரவால் = அன்பினால் விளங்கு = மேம்பட்ட பூரண ஞானம் மிஞ்சு முரவோனே = பூரணமான ஞானம் மிக்க சம்பந்தப் பெருமானே.
ஆர்கலி ஊடு எழுந்து மா வடிவாகி நின்ற
சூரனை மாள வென்று வான் உலகு ஆளும் அண்டரானவர்
கூர் அரந்தை தீர மு(ன்)னாள் மகிழ்ந்த முருகேசா
ஆர்கலி ஊடே = கடலின் நடுவில் எழுந்து = எழுந்து மா வடிவாகி = மா மர வடிவுடன் நின்ற சூரனை = நின்ற சூரனை மாள வென்று = அவன் இறக்கும்படி வென்று வான் உலகு ஆளும் = வானுலகை ஆளுகின்ற அண்டர் ஆனவர் = தேவர்களுக்கு உண்டான)
கூர் அரந்தை = பெரிய துன்பம் தீர = ஒழிய முன்னாள் = முன்பொரு நாள் மகிழ்ந்த = (உதவி செய்து) களிப்புற்ற முருகேசா = ( முருக ஈசா) முருகேசனே.
வாரணம் மூலம் என்ற போதினில் ஆழி கொண்டு
வாவியின் மாடு இடங்கர் பாழ் படவே எறிந்த
மா முகில் போல் இருண்ட மேனியனாம் முகுந்தன் மருகோனே
வாரணம் = யானை (கஜேந்திரன்) மூலம் என்ற போதினில் = ஆதி மூலமே என்று அழைத்த போது ஆழி கொண்டு = சக்கராயுதத்தை எடுத்துக்
கொண்டு வந்து வாவியின் மாடு = மடுவில் இருந்த இடங்கர் = முதலை பாழ் படவே எறிந்த = பாழ் படும்படி எறிந்த
மா முகில் போல் = கரிய மேகம் போல இருண்ட = இருண்ட மேனியனாம் முகுந்தன் = திரு மேனியை உடைய திருமாலின மருகோனே = மருகனே.
வாலுகம் மீது வண்டல் ஓடிய காலில் வந்து
சூல் நிறைவான சங்கு மா மணி ஈன உந்து
வாரிதி நீர் பரந்த சீரலைவாய் உகந்த பெருமாளே.
வாலுகம் மீது = வெண் மணலின் மீது வண்டல் ஓடிய = வண்டல் ஓடிய காலில் வந்து = வாய்க்கால் வழியாக வந்து சூல் நிறைவான = கருப்பம் நிறைந்த சங்கு = சங்குகள் மா = சிறந்த மணி = முத்து மணிகளை ஈன உந்து = பெறும்படியாக (அலை) வீசுகின்ற வாரிதி நீர் = கடல் நீர் பரந்த = பரந்துள்ள சீரலைவாய் = திருச்சீரலைவாயில் (திருச் செந்தூரில்)
மகிழ்ந்து வீற்றிருக்கும் பெருமாளே = பெருமாளே.
சுருக்க உரை
கச்சு அணிந்த, கும்பம் போன்ற கொங்கைகளை உடைய விலை மாதார்களின்
ஆடல், பாடல்களில் அலைப்புண்டு, மானம் இழந்து,
கீழ் மகனாகி, பெரிய பாதகங்களைச் செய்தனவனாகி,
தருமம் செய்யாமல், அடியோடு இறந்து போனவர்களுடைய
வாழ்வைக் கண்டும், காம ஆசையால் மூழ்கியுள்ள என் மயக்கம் தீரும்படி,
செயலற்று, நான் என்னும் ஆணவம் நீங்க, தியானத்தில் நிலைத்து நின்று, மனம், வாக்கு, காயம் இவை மூன்றும் ஒரு வழிப்பட, உனது இரு திருவடிகளை நினைந்து, அக் காட்சியைப் பெறுவதற்கு
தவம் செய்யும் யோகிகளைப் போல நானும் விளங்கும்படி
அருள் புரிவாயாக.
வேதக் கருத்துக்கள் யாவும் விளங்கும்படியாக, தேவாரப் பாக்களால்,
திருவாதிரை நாளை உகந்துள்ள சிவபெருமானை நான் வணங்குவேன் என்று உலகுக்குக்
காட்டிய ஞானம் மிக்க ஞானசம்பந்தராகிய பெருமானே, கடலில் இருந்த மாமரமாகிய சூரனை வென்று, வானுலகைத் தேவர்கள் ஆளும்படி
முன்பு அவர்களுக்கு உதவு செய்தவனே, மடுவில் முதலையால் பீடிக்கப்பட்ட யானை
ஆதி மூலமே எனவும் உடனே வந்து உதவிய திருமாலின் மருகனே, வெண் மணலின் மீது வண்டல் ஓடிய வாய்க்கால்
வழியாக வந்து, சங்குகள்
முத்து மணிகளைப் பெறும்படியாக கடல் நீர் பரந்துள்ள திருச்செந்தூரில் வீற்றிருக்கும்
பெருமாளே, நான் தவ யோகியாய் விளங்க அருள் புரிவாய்.
விளக்கக் குறிப்புகள்
அ. ஆதிரையானை நின்று தாழ்வன்...
(ஆடனல் ஆதிரையன் ஆரூர் அமர்ந்தானே)...சம்பந்தர்
தேவாரத் திருமுறை 1.105.1.
சிவனே முருகனாதலால், முருகவேள் சம்பந்தாராய்ப் பாடியது உலகுக்கு எடுத்துக்
காட்டு.
(நிருமலன் எனது உரை தனது
உரை ஆக)...சம்பந்தர் தேவாரத் திருமுறை
1,76.2.
ஞான சம்பந்த பெருமானாய்
வந்த ஞான தேசிகனே, சூரனைக் கொன்று வானவர் துன்பத்தைத் துடைத்த முருகப் பெருமானே, கஜேந்திரவரதாகிய
கருமுகில் வண்ணரது மருகனே, செந்தில் ஆண்டவனே, நான் என்கின்ற தற்போதத்தை விட்டு
விழிநாசி வைத்து ஒரு வழிப்பட்டு சிவயோகியாக அடியேன் விளங்க திருவருள் கேட்டு பாடிய
துதி
No comments:
Post a Comment
Your comments needs approval before being published