வஞ்சத் துடனொரு நெஞ்சிற் பலநினை
வஞ்சிக் கொடியிடை மடவாரும்
வந்திப் புதல்வரும் அந்திக்
கிளைஞரு
மண்டிக் கதறிடு வகைகூர
அஞ்சிக் கலைபடு பஞ்சிப் புழுவுடல்
அங்கிக் கிரையென வுடன்மேவ
அண்டிப் பயமுற வென்றிச் சமன்வரும்
அன்றைக் கடியிணை தரவேணும்
கஞ்சப் பிரமனை அஞ்சத் துயர்செய்து
கன்றிச் சிறையிடு மயில்வீரா
கண்டொத் தனமொழி அண்டத் திருமயில்
கண்டத் தழகிய திருமார்பா
செஞ்சொற் புலவர்கள் சங்கத்
தழிழ்தெரி
செந்திற் பதிநக ருறைவோனே
செம்பொற் குலவட குன்றைக் கடலிடை
சிந்தப் பொரவல பெருமாளே.
- திருச்செந்தூர்
பதம் பிரித்து உரை
வஞ்சத்துடன் ஒரு நெஞ்சில் பல நினை
வஞ்சி கொடி இடை மடவாரும்
வஞ்சத்துடன் = வஞ்சகத்துடன் ஒரு = ஒப்பற்ற நெஞ்சில் = மனத்தில் பல நினைவு = பல விதமான எண்ணங்களையும் (கொண்ட) வஞ்சிக் கொடி இடை = வஞ்சிக் கொடியைப் போன்ற இடையையும் உடைய மடவாரும் = மாதர்களும்
வந்தி புதல்வரும் அந்தி கிளைஞரும்
மண்டி கதறிடு வகை கூர
வந்திப் புதல்வரும் = வணங்கும் பிள்ளைகளும் அந்தி = நெருங்கிய கிளைஞரும் = சுற்றத்தாரும் மண்டி = ஒன்று கூடி கதறிடு = கதறுகின்ற வகை கூர = செய்கை மிகுதியாக.
அ(ம்)ச(ம்) கலைபடு பஞ்சு இப் புழு உடல்
அங்கிக்கு இரை என உடன் மேவி
அம்சம் கலை படு = (உடலின்) தத்துவப் பகுதிகள் பிரிபட்டுப்
போகின்ற பஞ்சு = பஞ்சு போன்ற இப்புழு உடல் = இந்தப் புழுக்கள் உள்ள உடல் அங்கிக்கு இரை என = நெருப்புக்கு உணவாகும்படி உடன் மேவ = உடனே எடுத்துச் செல்லும்படி.
அண்டி பயம் உற வென்றி சமன் வரும்
அன்றைக்கு அடி இணை தரவேணும்
அண்டி = நெருங்கி பயம் உற = பயப்படும்படி வென்றி = வெற்றி பொருந்திய சமன் வரும் = யமன் வரும் அன்றைக்கு = அந்தத் தினத்தில் அடி இணை = (உனது) திருவடி இணைகளை தர வேணும் = தந்தருள வேண்டும்.
கஞ்ச பிரமனை அஞ்ச துயர் செய்து
கன்ற சிறை இடும் அயில் வீரா
கஞ்சப் பிரமனை = தாமரையில் வீற்றிருக்கும் பிரமனை. அஞ்ச =பயப்படும்படி துயர் செய்து = அவனுக்குத் துயரம் உண்டாக்கி கன்ற = (அவன் மனம்) நோவ சிறை இடும் அயில் வீரா = சிறையில் இட்ட வேல் வீரனே.
கண்டு ஒத்தன மொழி அண்ட திரு மயில்
கண் தந்து அழகிய திரு மார்பா
கண்டு ஒத்தன மொழி=கற்கண்டுக்கு ஒப்பான மொழியை உடைய அண்டத் திரு மயில் = தேவர் குலத்து அழகிய மயில்
போன்ற (தேவ சேனையின்) கண் தந்து = பார்வை பாய்கின்ற அழகிய திருமார்பா = அழகிய திருமார்பனே.
செம் சொல் புலவர்கள் சங்க தமிழ் தெரி
செந்தில் பதி நகர் உறைவோனே
செம் சொல் புலவர்கள் = செவ்விய சொற்களை உடைய புலவர்களின் சங்கத் தமிழ் தெரி = சங்க காலத்துத் தமிழைப் பெற்ற செந்தில் பதி நகர் = திருச்செந்தூர் என்னும் ஊரில் உறைவோனே = உறைபவனே.
செம் பொன் குல வட குன்றை கடல் இடை
சிந்த பொர வல பெருமாளே.
செம்பொன் = செம்பொன்னாக குல = சிறந்து
வட குன்றை = வடக்கிலுள்ள கிரவுஞ்ச மலையை.
கடல் இடை சிந்த = கடலிடயே சிதறும்படி பொர வல்ல பெருமாளே = சண்டை செய்ய வல்ல பெருமாளே.
சுருக்க உரை
வஞ்சக நோக்கத்துடன் மனதில் பல வகையான எண்ணங்களைக் கொண்ட
வஞ்சிக் கொடி போன்ற இடையை உடைய மாதர்களும், வணங்கும் புதல்வர்களும், சுற்றத்தாரும் (பிணத்தைச் சுற்றி) ஒன்று கூடி கதறி அழ, உடல் அழியும்படி புழுக்கள் நிறைந்த உடலை உடனே நெருப்பில் இட எடுத்துச் செல்லும்படி
ஏவ, வெற்றி பொருந்திய யமன் வரும் அந்த நாளில் உனது திருவடியைத்
தந்து அருள வேண்டும்.
தாமரையில் வீற்றிருக்கும் பிரமன் அஞ்சும்படி அவன் மனம்
நோவச் சிறையில் வைத்த வேல் வீரனே, கற்கண்டு போல் இனிய சொற்களைக் கொண்ட தேவலோகப்
பெண்ணாகிய தேவசேனையின் பார்வை பாய்கின்ற திருமார்பனே, சொல் திறமை வாய்ந்த புலவர்களுடைய சங்க
காலத்துத் தமிழ் வன்மையைப் பெற்ற திருச்செந்தூர்ப் பதியில் உறைபவனே, வடக்கே இருந்த கிரவுஞ்ச மலையைக் கடலிடையே
சிதறும்படி போர் செய்ய வல்ல பெருமாளே, சமன் வரும் அன்றைக்கு வந்து எனக்கு உனது
திருவடிகளைத் தர வேண்டும்.
விளக்கக் குறிப்புகள்
அ. அஞ்சக் கலைபடு = அம்சம் கலை படு. அந்தி
= நெருங்கிய. கண்டத்து = கண் தந்து.
ஆ. கஞ்சப் பிரமனை....
(விடவசனஞ்சில
பறையும் விரிஞ்சன் விலங்கது கால்பூண்டு தன் மேல் தீர்ந்தனன் வேல்வாங்கவே)…………………………………………………...........................................வேல்வாங்கு வகுப்பு
(தலராசி தந்தானைச்
சிறையிட்ட வேல்)……………………....................….…….கந்தர் அந்தாதி
இ. தமிழ் தெரி செந்திற்பதி...
(உலகம் புகழ்ந்த
ஓங்குயர் சீரலைவாய்).............................................திருமுருகாற்றுப்படை.
(வெண்டலைப்
புணரி யலைக்குஞ் செந்தில் நெடுவேள் நிலை இயகாமர் வியன் துறை)...............................................................................................புறநானூறு 55.
No comments:
Post a Comment
Your comments needs approval before being published