பகர்தற்கரி
தான செந்தமி ழிசையிற்சில பாட லன்பொடு
பயில்பல காவி யங்களை யுணராதே
பவளத்தினை
வீழி யின்கனி யதனைப்பொரு வாய் மடந்தையர்
பசலைத்தன் மேபெ றும்படி விரகாலே
சகரக்கடல்
சூழு மம்புவி மிசையிப்படி யேதி ரிந்துழல்
சருகொத்துள மேய யர்fந்துடல் மெலியாமுன்
தகதித்திமி
தாகி ணங்கிண எனவுற்றெழு தோகை யம்பரி
தனிலற்புத மாக வந்தருள் புரிவாயே
நுகர்வித்தக
மாகு மென்றுமை மொழியிற்பொழி பாலை யுண்டிடு
நுவல்மெய்ப்புள பால னென்றிடு மிளையோனே
நுதிவைத்தக
ராம லைந்திடு களிறுக்கரு ளேபு ரிந்திட
நொடியிற்பரி வாக வந்தவன் மருகோனே
அகரப்பொரு
ளாதி யொன்றிடு முதலக்கர மான தின்பொருள்
அரனுக்கினி தாமொ ழிந்திடு குருநாதா
அமரர்க்கிறை
யேவ ணங்கிய பழநித்திரு வாவி னன்குடி
அதனிற்குடி யாயி ருந்தருள் பெருமாளே.
-
81 பழநி
பதம் பிரித்து
உரை
பகர்தற்கு அரிதான செம் தமிழ் இசையில் சில பாடல்
பயில பல காவியங்களை அன்பொடு உணராதே
பகர்தற்கு அரிதான
= சொல்லுதற்கு அருமையான செம் தமிழ் இசையில் = செந்தமிழ் இசையில் சில பாடல் = சில பாடல்களை அன்பொடு = அன்போடு
பயில = பயிலுவதற்கு வேண்டிய பல காவியங்களை = பல நூல்களைப் படித்து உணராதே
= உணராமல்.
************
சகர கடல் சூழும் அம் புவி மிசை இப்படியே திரிந்து உழல்
சருகு ஒத்து உளமே அயர்ந்து உடல் மெலியா முன்
சகரக் கடல் சூழுழ் = சகர புத்திரர்களால் ஏற்பட்ட கடல் சூழ்ந்த
அம் = அழகிய புவி மிசை = பூமியில் இப்படியே = இவ்வாறு திரிந்து உழல் = நான் திரிந்து, அலைந்து சருகு ஒத்து = சருகு போன்று உளமே அயர்ந்து = மனம் சோர்ந்து உடல் மெலியா முன் = உடலும் மெலிந்து போவதற்கு முன்பாக.
தகதித் திமி தாகிணங்கிண என உற்று எழு தோகை அம் பரி
தனில் அற்புதமாக வந்து அருள் புரிவாயே
தகதித்திமி....என உற்று = இவ்வாறான ஒலியுடன் எழு = வருகின்ற தோகை அம் பரி தனில் = கலாபம் கொண்ட குதிரையாகிய மயில் மீது அற்புதமாக வந்து = அற்புதமாக எழுந்தருளி அருள் புரிவாயே = அருள் புரிவாயாக.
நுகர் வித்தகமாகும் என்று உமை மொழியில் பொழி பாலை உண்டிடு
நுவல் மெய்ப்பு உள பாலன் என்றிடும் இளையோனே
நுகர் = உண்ணுக வித்தகமாகும் என்று = இது ஞானத்தைத் தரும் என்று
உமை = உமையம்மை மொழியில் = மொழிந்து பொழி = (பொன் கிண்ணத்தில்) பொழிந்து
பாலை உண்டிடு = பாலை உண்டவனும் நுவல் = சொல்லப்படும் மெய்ப்புள = வாய்மை, புகழ்ச்சி நிறைந்த வனுமாகிய
பாலன் என்றிடும் = குழந்தை என்று பாராட்டப் படுகின்ற
இளையோனே = இளையவனே.
நுதி வைத்த கரா மலைந்திடு களிறுக்கு அருளே புரிந்திடு
நொடியில் பரிவாக வந்தவன் மருகோனே
நுதி வைத்த = நுனிக் கூர்மை வாய் கொண்ட கரா = ஆண் முதலை மலைந்திடு = வலித்துப் போரிட்ட. களிறுக்கு = (கஜேந்திரனாகிய) யானைக்கு. அருள் புரிந்திட = அருள் புரிதற் பொருட்டு நொடியினில் = ஒரு நொடிப் பொழுதில் பரிவாக வந்தவன் = அன்புடன் வந்த திருமாலின் மருகோனே = மருகனே.
அகர பொருள் ஆதி ஒன்றிடு முதல் அக்கரமானது இன் பொருள்
அரனுக்கு இனிதா மொழிந்திடு குருநாதா
அகரப் பொருள் ஆதி ஒன்றிடு = அகரம உகர, மகாராதிகள் அடங்கிய முதல் அக்கரமானதின் = முதல் எழுத்தாம் பிரணவத்தின் பொருள் = பொருளை அரனுக்கு இனிதா மொழிந்திடு = சிவ பெருமானுக்கு இனிமையாக உபதேசித்த
குருநாதா = குரு நாதரே.
அமரர்க்கு இறையே வணங்கிய பழநி திருவாவினன்குடி
அதனில் குடியாய் இருந்து அருள் பெருமாளே.
அமரர்க்கு இறையே = தேவர்களுக்குத் தலைவனான இந்திரன். வணங்கிய = வணங்கிப் பூசித்த. திருவாவினன்குடி அதனில் = பழனியில். குடியாய் இருந்து = குடியாக வீற்றிருந்து.
அருள் பெருமாளே = அருளும் பெருமாளே.
சுருக்க உரை
அரிய செந்தமிழ்ப்
பாடல்கள் சிலவற்றைக் கற்று உணராமல், விலை மாதர்களின் பவளத்தையும், வீழிப் பழத்தையும்
ஒத்த வாயிதழும், பரந்த கொங்கையும் பெற விரும்பி,
இப்பூமியில் நான் திரிந்து அலைந்து, உடல் மெலிந்து, உள்ளம் சோர்ந்து அழிவதற்கு முன்பே, தகதித்திமி என்று
ஓலி செய்து வரும் மயிலின் மேல் ஏறி வந்து அருள் புரிவாயாக.
இது ஞானம் தரும்
என்று உமா தேவியார் மொழிந்து, பொற் கிண்ணத்தில்
தந்த பாலை உண்டு,
வாய்மை நிறைந்த குழந்தை எனப் பலரும் போற்றும் இளையவனே. கூர்மையான வாயை உடைய முதலையுடன்
போரிட்ட கஜேந்திரன் என்ற யானையைக் காக்க ஒரு நொடிப் பொழுதில் வந்த திருமாலின் மருகனே,
அகர, உகர, மகாரங்களின் முதல் அக்கரமான பிரணவத்தை இனிமையாகச் சிவபெருமானுக்கு உபதேசித்த
குரு நாதனே, தேவர்கள் தலைவன் ஆன இந்திரன் வணங்கிய பழனியில் வீற்றிருந்து அருள் புரியும்
பெருமாளே, மயில் மீது வந்து அருள் புரிவாயாக.
ஒப்புக
அ. பகர்தற்கரிய செந்தமிழில்.....
செப்பரிய தண் தமிழால் தெரிந்த பாட இவை வல்லார்)...சம்பந்தர்
தேவாம்.
செந்தமிழால் முருகனைப் பாட வேண்டும் என்பது அருணகிரி நாதர் பேராசை.
வேலுஞ்செஞ் சேவலும்
செந்தமிழாற் பகரார்வம்..................... ................. ...கந்தர்
அலங்காரம்
பின் வரும் திருப்புகழ்ப்
பாக்களிலும் இக்கருத்தைக் காணலாம்.
·
செந்தமிழ் வழுத்தி உனை
அன்பொடு துதிக்க மனம் அருள்வாயே)...... ................ ............ஐங்கரனையொத்த
·
எனக் கென்றப் பொருட் டங்கத் தொடுக்குஞ் சொற்
றமிழ்த்தந்திப் படி ஆள்வாய்................ ................ .................................பருத்தந்த
·
செந்தமிழ் பாடும் புலப்பட்டங் கொடுத்தற்கும்...............................................பெருக்கச்சஞ்சலி
·
தமிழ்க் கொற்றப் புகழ்ச் செப்பித் திரிவேனோ....... .................................. கடத்தைப்பற்
·
சுத்தத் சித்தித் தமிழைத் திட்டத் துக்குப் புகலப் பெறுவேனோ......... ..... .. கொக்குக்கொக்க
·
தமிழிசையதாகவே மொழி செய்தே நினைந்திடுமாறு ...அருள்வாயே.......... ....விதியதாகவே
·
தமிழால்...பாடென்று ஆட்கொ டருள்வாயே.............................................................வடிவதுநீல
·
சரணாரவிந்தமது பாட வண்டமிழ் விநோதம் அருள்வாயே.....................................அஞ்சுவித
·
செஞ்சொல் சேர் சித்ரத் தமிழாலுன் செம்பொனார் வத்தைப் பெறுவேனோ.. பஞ்சுநேர்
·
தமிழ்ச் சுவையிட்டு ... எய்த்திட ...அருள்வாயே...... ......................................வினைத்திரளு
·
சித்ரத் நித்தத் தமிழாலுன் நாமத்தை கற்றுப் புகழ்க்கைக்குப்
புரிவாயே .......வானப்புக்கு ..
ஆ. சகரக் கடல்....
சகரர் அறுபதினாயிரவர். பூமியைத் தோண்டிக் கபிலரது
கோபத் தீயால் இறந்து
பகீரதனால் நற்கதி பெற்றவர்கள்.
இ. நுகர் வித்தகமாகும் என்று உறை...
(எண்ணரிய சிவஞானத் தின்னமுதங் குழைத்தருளி
உண்ணடிசில் என ஊட்ட உமையம்மை).................................. ............... .பெரிய புராணம்.
ஈ. நுவல் மெய்ப்புள பால னென்றிடு மிளையோனே....
(நாடுபல நீடு புகழ் ஞானசம்பந்தன் உரை நல்ல தமிழின்
பாடலொடு பாடும் இசை வல்லவர்கள் நல்லர்).................. .............. ..சம்பந்தர் தேவாரம்
உ. வீழியின் கனி அதனைப் பொரு...
(வீழியின் கனிவாய் ஒரு மெல்லியல்
தோழி கண்ணில் கடைக்கணிற் சொல்லினாள்)...................... ..................கம்ப ராமாயணம்
ஊ நுதி வைத்த கரா மலைந்திடு களிறுக்கு
அருளே புரிந்திடு
ஆனைமடு வாயிலன்று
மூலமென வோல மென்ற.....................................திருப்புகழ், சாலநெடு
இந்திராஜும்னன்
எனும் மன்னன் மிகச்சிறந்த விஷ்ணு பக்தனாக இருந்தான். சதா சர்வ காலமும் விஷ்ணு சிந்தனையிலேயே
இருப்பான். விஷ்ணுவை கும்பிடாமல் எந்த ஒரு செயலையும் செய்யமாட்டான். ஒரு நாள் அவன்
இவ்வுலகத்தையே மறந்த நிலையில் விஷ்ணு பூஜை செய்து கொண்டிருந்தான். இது போன்ற நேரங்களில்
யாரும் அவனை காண வருவதுமில்லை. இவனும் யாரையும் காண்பதுமில்லை. இப்படி அவன் பூஜை செய்து கொண்டிருந்த
வேளையில் கோபக்கார துர்வாச முனிவர் அவனைக்காண வந்தார். இவர் வந்து வெகு நேரம் ஆனது.
ஆனாலும் மன்னன் தன் பக்திக்குடிலை விட்டு வெளியே வரவில்லை. பொறுத்து பொறுத்து பார்த்த
துர்வாசர், மன்னன் இருந்த குடிலுக்குள் சென்று அவன் முன்னால் நின்றார். அப்போதும் கூட
மன்னன் வந்திருப்பதை அறியாமல் ஆழ்ந்த பக்தியில்
மூழ்கியி ருந்தான். இதனால் முனிவர்
கடும் கோபத்துடன் உரத்த குரலில்,""மன்னா! நீ மிகவும் கர்வம் உள்ளவனாகவும், பக்தியில் சிறந்தவன் என்ற மமதை கொண்டவனாகவும்
இருப்பதாலும்,
நீ விலங்குகளில் மதம் பிடித்த யானையாக போவாய்,''என சபித்தார். முனிவர் போட்ட கடும்
சத்தத்தினால் கண்விழித்த மன்னன் அதிர்ந்து போனான். அவரிடம் மன்னிப்பும், பவிமோசனமும்
கேட்டான். இவனது நிலையுணர்ந்த முனிவர் அவன் மீது இரக்கம் கொண்டு, ""நீ யானையாக
இருந்தாலும், அப்போதும் திருமால் மீது பக்தி கொண்ட கஜேந்திரனாக திகழ்வாய்'' என்று கூறினார்.
அத்துடன்,""ஒரு குளத்தில் உள்ள முதலை உனது காலை பிடிக்கும். அப்போது நீ
"ஆதிமூலமே!' என மகாவிஷ்ணுவை அழைக்க,
அவர் ஓடி வந்து உன்னை காப்பாற்றி, உனக்கு மோட்சமும், சாப விமோசனமும் கிடைக்கும்,
''என்றார். ஒரு முறை கூஹு என்னும் அரக்கன் குளத்தில் வாழ்ந்து வந்தான். அவன் தண்ணீரில்
இருந்து கொண்டு அங்கு வந்து குளிப்போரின் காலைப்பிடித்து இழுத்து துன்புறுத்துவதையே
தொழிலாக கொண்டிருந்தான். ஒரு முறை அகத்திய மாமுனிவர் சிவனின் கட்டளைப்படி தென்திசை
நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது சிவ பூஜை செய்யும் நேரம் வந்தது.
அருகிலிருந்த குளத்தில்
நீராடினார். அங்கு இருந்த அரக்கன் அகத்தியரின்
காலைப்பிடித்தான்.
இதனால் அகத்தியர் கடும் கோபம் கொண்டார். அவர்,""நீ வருபவர்களையெல்லாம் காலைப்பிடித்து
இழுப்பதால், முதலையாக மாறுவாய்,''என சபித்தார். அவன் அகத்தியரிடம் சாப விமோசனம் கேட்டான்.
அகத்தியர்," "கஜேந்திரன் என்ற யானை இந்த குளத்திற்கு வரும் போது நீ அதன்
காலைப்பிடிப்பாய், அப்போது அதைக்காப்பாற்ற
திருமால் வருவார். அவரது சக்ராயுதம் பட்டு உனக்கு சாப விமோசனம் கிடைக்கும்,''என்றார்.
இந்த கபிஸ்தத்தின் கோயில் முன்பு கிழக்கு திசையில்
உள்ள கபில தீர்த்தத்தில் ஒரு நாள் கஜேந்திரன்
நீர் அருந்த இறங்கியது. இதைக்கண்ட முதலை யானையின்
காலைக் கவ்வியது."ஆதிமூலமே! காப்பாற்று' என யானை கத்தியவுடன் கருட வாகனத்தில் லட்சுமி சமேதராக
விஷ்ணு வந்து, சக்ராயுதத்தால் முதலையை அழித்து
கஜேந்திரனுக்கு மோட்சமளித்ததாக வரலாறு.
Meaning and explanations provided by
Dr.
C.R. Krishnamurti, Professor Emeritus, University of British Columbia, Vancouver,
B.C. Canada
Compilation and
Editorial additions by Shantha and
Sundararajan
No comments:
Post a Comment
Your comments needs approval before being published