அவாமறுவி னாவுசுதை காணுமட வாரெனும
வார்கனலில்
வாழ்வென் றுணராதே
அரானுகர வாதையுறு தேரைகதி நாடுமறி
வாகியுள
மால்கொண் டதனாலே
சிவாயவெனு நாமமொரு காலுநினை யாததிமி
ராகரனை
வாவென்ற ருள்வாயே
திரோதமல மாறுமடி யார்களரு மாதவர்தி
யாமுறு
பாதந் தருவாயே
உவாவினிய கானுவினி லாவுமயில் வாகனமு
லாசமுட
னேறுங் கழலோனே
உலாவுதய பாநுசத கோடியுரு வானவொளி
வாகுமயில்
வேலங் கையிலோனே
துவாதசபு யாசலஷ டாநநவ ராசிவசு
தாஎயினர்
மானன் புடையோனே
சுராதிபதி மாலயனு மாலொடுச லாமிடுசு
வாமிமலை
வாழும் பெருமாளே.
93 திருவேரகம்
|
பதம் பிரித்து உரை
அவா மருவு இ(ன்)னா வசுதை காணும் மடவார் எனும்
அவார் கனலில் வாழ்வு என்று உணராதே
அவா =
ஆசையினால். மருவு = உண்டாகும்இ(ன்)னா = துன்பம் வசுதை காணும் = இந்தப் பூமியில் காணப்படுகின்ற மடவார் எனும் அவ(a)ர் = விலை மாதர்கள் என்கின்ற அவர் களுடன் வாழ்வு கனலில் வாழ்வு என்று = நெருப்பின மீது நடத்தும் துன்ப வாழ்வு என்று. உணராதே = உணராமல்.
அரா நுகர வாதை உறு தேரை கதி நாடும்
அறிவு ஆகி உளம் மால் கொண்டு அதனாலே
அரா = பாம்பால். நுகர = உண்ணப்படுகின்ற. வாதை உறு தேரை= அந்த வேதனையைக் கொண்ட தேரை. கதி நாடும் அறிவு ஆகி=அறிவைக் கொண்டவனாகி உள மால் கொண்டு அதனாலே = உள்ளத்தில் ஆசை கொண்ட அக்காரணத்தினால்.
சிவாய எனு நாமம் ஒரு காலு நினையாத
திமிர ஆகரனை வா என்று அருள்வாயே
சிவாய எனு
நாமம் = சிவாய என்கின்ற திரு நாமத்தை ஒரு காலும் நினையாத= ஒருபோதும் நினையாத திமிர ஆகரனை = இருளுக்கு இடமானவனை. வா என்று அருள்வாயே = வா என்று அழைத்து அருள் புரிவாயாக.
திரோத மலமாறும் அடியார்கள் அரு மாதவர்
தியானம் உறு பாதம் தருவாயே
திரோத மலம் = திரோதம் (உன்னை மறத்தல்) என்ற குற்றத்தை. ஆறும் அடியார்கள் = நீக்கும்
அடியார்களும் அரு மாதவர் = அருமையான பெரிய தவசிகளும். தியானம் உறு = தியானம் செய்கன்ற பாதம் தருவாயே = திருவடியைத் தருவாயாக.
உவாவு இனிய கானுவில் நிலாவு மயில் வாகனம்
உலாசமுடன் ஏறும் கழலோனே
உவாவும் = (பிணி முகம் எனப்படும்) யானையையும் இனிய கானுவில் நிலாவும் = இனிய காட்டில் உலாவும் மயில் = மயிலையும். வாகனம் = வாகனமாகக் கொண்டு உலாசமுடன் ஏறும் = உல்லாசத்துடன்
அவை மீது ஏறும் கழலோனே= திரு வடியை உடையவனே.
உலா உதய பானு சத கோடி உருவான ஒளி
வாகும் அயில் வேல் அம் கையிலோனே
உலாவு உதய பாநு
= உலவி வரும் உதய சூரியர்கள் சத கோடி உருவான = நூறு கோடி உருவங்கள் சேர்ந்தது போல் ஒளி வாகும் அயில்= ஒளி விடும் வேலை அம் கையிலோனே = அழகிய
கையில் ஏந்தியவனே.
துவாதச புய அசல ஷட் ஆநந வரா சிவ
சுதா எயினர் மான் அன்பு உடையோனே
துவாதச = பன்னிரண்டு புய சல = மலைகளாகிய கரங்க ளையும் ஷட் ஆநந= ஆறு திருமுகங்களையும் உடைய வரா = மேலோனே சிவ சுதா =சிவனுடைய மகனே எயினர் மான் = வேடர்கள குலமானாகிய வள்ளியின் அன்பு உடையோனே = அன்பை உடையவனே.
சுர அதிபதி மால் அயனும் மாலொடு சலாம் இடு
சுவாமி மலை வாழும் பெருமாளே.
சுர அதிபதி = தேவர்களுக்குத் தலைவனான இந்திரனும். மால் =திருமாலும் அயன் ஒடு = பிரமனும் மாலொடு= காதலுடன் சலாமிடு= வணங்குகின்ற சுவாமி மலை வாழும் பெருமாளே = திருவேரகத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.
சுருக்க உரை
ஆசையும்
அதனால் வரும் துன்பமும் உள்ள இப்பூலகில் காணப்படும் விலை மாதர்களுடன வாழ்வது
நெருப்பு வாழ்வை ஒக்கும் என்று உணராமல், பாம்பின் வாய்த் தேரையின் கதியை அடைகின்ற அறிவைக் கொண்டவனாகி, சிவாய என்ற திருநாமத்தை ஒரு பொழுதும் நினையாத அஞ்ஞானம் பூண்ட
என்னை வா என அழைத்து அருள் புரிவாயாக. உன்னை மறத்தல் என்னும் குற்றத்தைப் போக்கத்
தவசிகள் தியானம் செய்கின்ற திருவடியைத் தந்து அருளுக.
பிணிமுகம்
என்ற யானையையும்,
காட்டில் வாழும் மயிலையும் வாகனமாகக் கொண்டு உல்லாசத்துடன்
உலாவி வரும் திருவடியை உடையவனே, கூர்மையான வேலை ஏந்தியவனே, பன்னிரண்டு கரங்களையும்
ஆறு திரு முகங்களையும் கொண்டவனே, சிவனின் குழந்தையே, வேடர் பெண்ணான வள்ளியின்அன்பைப்
பெற்றவனே, இந்திரனும்,
திருமாலும், பிரமனும் வணங்கும் பெருமாளே. திருவேரகத்தில் வாழும் பெருமாளே, என்னை வா என
அழைத்து அருள் செய்வாயாக.
ஒப்புக
அ. அரா நுகர் வாதை உறு தேரை .....
பாம்பின் வாய்த் தேரை போலப் பலபல நினைக்கின்றேனை
ஓம்பி நீ உய்யக் கொள்ளாய் ஒற்றியூர் உடைய கோவே --- திருநாவுக்கரசர் தேவாரம்
ஆ. சிவாய எனு நாமம் ...... இது முத்தி பஞ்சாக்ஷரம் எனப்படும்.
அரகர சிவாய வென்று தினமும் நினையாமல் நின்று
அறுசமய நீதி ஒன்று அறியாமல் -- திருப்புகழ், கருவினுருவாகி
மண்ணினார் மறவாது சிவாய என்று
எண்ணினார்க்கு இடமா எழில் வானகம்
பண்ணினார் அவர் பாலைத்துறையாரே --
திருநாவுக்கரசர் தேவாரம்
சிவாய நமவெனச் சித்த மொருக்கி
அவாய மறவே யடிமைய தாக்கிச்
சிவாய சிவசிவ வென்றென்றே சிந்தை
அவாயங் கெட நிற்க ஆனந்தமாமே -- திருமந்திரம்
மாலொடு சலாமிடு....
சலாமிடு = வணங்குகின்ற. பிற மொழிச் சொல்
முருகனுக்கு
வாகனமான உள்ள யானைக்கு பிணிமுகம் என்பது பெயர். அது பற்றிய குறிப்பு பரிபாடலில் உள்ளது.
திருத்தணி முருகனுக்கு வாகனம் யானை. அது போல போரூர், பிரான் மலை ஸ்வாமிமலை போன்ற
ஆலயங்களிலும் முருகனுக்கு யானை வாகனமே உள்ளது
No comments:
Post a Comment
Your comments needs approval before being published