Sunday 23 September 2012

95.இருவினை புனைந்து


        இருவினை புனைந்து ஞான விழிமுனை திறந்து நோயி
           னிருவினை யிடைந்து போக                           மலமூட
        விருளற விளங்கி யாறு முகமொடு கலந்து பேத
           மிலையென இரண்டு பேரு                             மழகான
        பரிமள சுகந்த வீத மயமென மகிழ்ந்து தேவர்
           பணியவிண் மடந்தை பாத                         மலர்தூவப்
        பரிவுகொ டநந்த கோடி முநிவர்கள் புகழ்ந்து பாட
           பருமயி லுடன்கு லாவி                              வரவேணும்
        அரியய னறிந்தி டாத அடியிணை சிவந்த பாதம்
          அடியென விளங்கி யாடு                               நடராஜன்
        அழலுறு மிரும்பின் மேனி மகிழ்மர கதம்பெ ணாகம்
           அயலணி சிவன்பு ராரி                              யருள்சேயே
        மருவலர் கள்திண்ப ணார முடியுடல் நடுங்கி ஆவி
           மறலியுண வென்ற வேலை                  யுடையோனே
        வளைகுல மலங்கு காவி ரியின்வட  புறஞ்சு  வாமி
           மலைமிசை விளங்கு தேவர்                       பெருமாளே
-95 திருவேரகம்


பதம் பிரித்து உரை

இருவினை புனைந்து ஞான விழி முனை திறந்து நோயின்
இருவினை இடைந்து போக மலம் மூட

இரு வினை புனைந்து = பெரிய செயலாகிய சிவ யோகத்தை மேற் கொண்டு. ஞான விழி முனை திறந்து = அறிவுக் கண்ணாகும் நெற்றியில் உள்ள நந்திச் சுழி திறக்கப் பெற்று. நோயின் இரு வினை = நோயாக வரும் புண்ணிய பாவ கர்மங்கள். இடைந்து போக = (என்னை விட்டுப்) பின் வாங்க. மலம் மூட = அறியாமைக்குக் காரணமாகிய ஆணவ மலம் மூடுகின்ற அந்த.

இருள் அற விளங்கி ஆறு முகமொடு கலந்து பேதம்
இலை என இரண்டு பேரும் அழகான

இருள் அற = இருள் தேய்ந்து போகவும். விளங்கி = (அதனால் மெய்ஞ்ஞான ஒளி வீச) விளக்கமுற்று. ஆறு முகமொடு கலந்து = (உனது) ஆறு முகங்களோடு கலந்து. பேதம் இலை என = பரவாத்மாவாகிய தேவரீரும், ஜீவான்மாவாகிய அடியேனும் இரண்டெனும் தன்மை நீங்கிக் கலந்து. இரண்டு பேரும் = நீயும் நானுமாகிய இருவரும். அழகான = அழகிய.

பரிமள சுகந்த வீத மயம் என மகிழ்ந்து தேவர்
பணிய விண் மடந்தை பாத மலர் தூவ

பரிமள சுகந்த வீதம் மயம் என = மலரும் அதன் மிகுந்த நறு மணமும் என்று சொல்லும்படி. மகிழ்ந்து = மகிழ்வுற்று தேவர்பணிய = தேவர்கள் பணியவும் விண் மடந்தை = தேவ லோகத்துப் பெண்கள். பாத மலர் தூவ = திருவடிகளில் மலர் தூவவும்.

பரிவு கொடு அநந்த கோடி முநிவர்கள் புகழ்ந்து பாட
பரு மயிலுடன் குலாவி வரவேணும்

பரிவு கொடு = அன்புடன். அநந்த கோடி முநிவர்கள் = கோடிக் கணக்கான முனிவர்கள். புகழ்ந்து பாட = புகழ்ந்து பாடவும். பரு மயிலுடன் = (நீ) பருத்த மயில் மீது ஏறி குலாவி வரவேணும் = விளங்கி வர வேண்டும்.

அரி அயன் அறிந்திடாத அடி இணை சிவந்த பாதம்
அடி என விளங்கி ஆடு நடராஜன்

அரி அயன் = திருமாலும் பிரமனும். அறிந்திடாத = அறிந்து உணராத. அடி இணை = இரு திருவடிகளாகிய. சிவந்த பாதம் = சிவந்த பாதங்களை. அடி என விளங்கி = அளவாக வைத்து விளங்க. ஆடும் = ஆடுகின்ற. நடராஜன் = நடராசப் பெருமான்.

அழல் உறும் இரும்பின் மேனி மகிழ் மரகதம் பெண் ஆகம்
அயில் அணி சிவன் புராரி அருள் சேயே

அழல் உறும் = நெருப்பில் இட்ட. இரும்பின் மேனி = இரும்பு போல (ஒளி விடும்) திருமேனி. மகிழ் = மகிழ்ச்சி கொண்ட. மரகதம் பெண் = பச்சை நிறம் உடைய உமா தேவி. ஆகம் அயல் அணி = திருமேனியைப் பக்கத்தில் இருத்திக் கொண்ட. புராரி = திரிபுரத்தை எரித்த சிவபெருமான். அருள் சேயே = அருளிய குழந்தையே.

மருவலர்கள் திண் பணார முடி உடல் நடுங்க ஆவி
மறலி உ(ண்)ண வென்ற வேலை உடையோனே

மருவலர்கள் = பகைவர்களாகிய அசுரர்கள். திண் பணார முடி = வலிய அலங்காரித்த நவ ரத்ன மாலைகளுடன் கூடிய தலைகளும். உடல் நடுங்க = உடலும் நடுங்க. ஆவி மறலி உ(ண்)ண = யமன் உயிரைக் குடிக்கவும். வென்ற வேலை உடையோனே = வென்ற வேலாயுதத்தை உடையவனே.

வளை குலம் அலங்கு காவிரியின் வட புறம் சுவாமி
மலை மிசை விளங்கு தேவர் பெருமாளே.

வளை குலம் = சங்கின் கூட்டங்கள். அலங்கும் = அசைந்து செல்லும். காவிரியின் வட புறம் = காவிரி ஆற்றின்வட புறத்தில் உள்ள. சுவாமி மலை மிசை விளங்கும் = திருவேரகத்தில் விளங்கும். தேவர் பெருமாளே = தேவர்கள் பெருமாளே.

சுருக்க உரை

சிவ யோகத்தை மேற்கொண்டு அறிவுக் கண் திறக்கப் பெற்று, பிறவிப் பிணிக்குக் காரணமான இருவினைகளும், ஆணவ மலமாகிய இருளும் விலகிப் போக, மெய் ஞான விளக்கம் உற்று, நீ, நான் என்ற பேதம் இல்லாமல் உன் ஆறு முகங்களுடன் அத்துவிதமாகக் கலந்து, பல கோடி முனிவர்கள் புகழ்ந்து பாட, மயிலின் மீது வரவேணும். 

அரி அயன் ஆகிய இருவரும் அறியாத திருவடிகள் கொண்ட சிவனும் உமையும் அருளிய குழந்தையே. அசுரர்கள் உடல் மூடிய வேலை எய்தியவனே. காவிரியின் வட பகுதியில் வாழும் பெருமாளே. இரு வினைகளும், மும்மலமும் நீங்க அருள் புரிந்து மயில் மீது வரவேணும்.

ஒப்புக

1இருவினை...  
செனித்த காரி யோபாதி யொளித்து ஞான ஆசார
சிரத்தை யாகி யான்வேறெ னுடல்வேறு
செகத்தி யாவும் வேறாக நிகழ்ச்சி யாம னோதீத
சிவச்சொ ரூப மாயோகி                     ------------------------                 திருப்புகழ்,  அனித்தமான.

2ஆறுமுகமொடு கலந்து.... 
  
ஊனங்க ளுயிர்கள் மோக நானென்ப தறிவிலாமல்
ஓமங்க யுருவமாகி இருவோரும்
ஓரந்த மருவி ஞான மாவிஞ்சை முதுகினேறி
லோகங்கள் வலம தாட அருள்தாராய்.               -----------              திருப்புகழ்,  ஞானங்கொள்

நீவேறெ னாதி ருக்க நான்வேறெ னாதி ருக்க
நேராக வாழ் வதற்கு னருள்கூர                         ------------------                  திருப்புகழ், நாவேறு.

இருவினைமு மலமற இறவியொடு பிறவியற
ஏகபோகமாய் நீயு நானுமாய்

இறுகும் வகை பரமசுகம் அதனையருள்              ----------                    திருப்புகழ், அறுகுநுனி.

நீயான ஞான விநோதந் தனையென்று நீயருள்வாய்                      ...      கந்தர் அலங்காரம்

No comments:

Post a Comment

Your comments needs approval before being published