207
இராமேசுரம்
தானதன தானதன தானதன தானதன
தானதன தானதன தானதன தானதன
தானதன் தானதன தானதன தானதன தனதான
வாலவய தாகியழ காகிமத னாகிபணி
வாணிபமொ டாடிமரு
ளாடிவிளை யாடிவிழல்
வாழ்வுசத மாகிவலு
வாகிமட கூடமொடு பொருள்தேடி
வாசபுழு கேடுமல ரோடுமன மாகிமகிழ்
வாசனைக ளாதியிட
லாகிமய லாகிவிலை
மாதர்களை மேவியவ
ராசைதனி லேசுழல சிலநாள்போய்த்
தோல்திரைக ளாகிநரை யாகிகுரு டாகியிரு
கால்கள்தடு
மாறிசெவி மாறிபசு பாசபதி
சூழ்கதிகள்
மாறிசுக மாறிதடி யோடுதிரி யுறுநாளிற்
சூலைசொறி யீளைவலி வாதமொடு நீரிழிவு
சோகைகள் மாலைசுர
மோடுபிணி தூறிருமல்
சூழலுற மூலகசு
மாலமெனெ நாறியுட லழிவேனோ
நாலுமுக னாதியரி யோமெனஅ தாரமுரை
யாதபிர மாவைவிழ
மோதிபொரு ளோதுகென
நாலுசிர மோடுசிகை
தூளிபட தாளமிடு மிளையோனே
நாறிதழி வேணிசிவ ரூபகலி யாணிமுத
லீணமக வானைமகிழ்
தோழவன மீதுசெறி
ஞானகுற மாதைதினை
காவில்மண மேவுபுகழ் மயில்வீரா
ஓலமிடு தாடகைசு வாகுவள ரேழுமரம்
வாலியொடு நீலிபக
னோடொருவி ராதனெழ
மோதகட லோடுவிறல்
ராவணகு ழாமமரில் பொடியாக
ஓகைதழல் வாளிவிடு மூரிதநு நேமிவளை
பாணிதிரு மார்பனரி
கேசன்மரு காஎனவே
யோதமறை ராமெசுர
மேவுகும ராவுமரர் பெருமாளே
பதம் பிரித்தல்
வால வயதாகி அழகாகி
மதனாகி பணி
வாணிபமோடு ஆடி
மருளாடி விளையாடி விழல்
வாழ்வு சதமாகி
வலுவாகி மட கூடமோடு பொருள் தேடி
வால வயது ஆகி = கட்டிளமை வயதை அடைந்து
அழகாகி = அழகு நிரம்பப் பெற்று மதனாகி = மன்மதன் போல் விளங்கி பணி வாணிபமொடு ஆடி = (ஊதியம் தரும் பல) வாணிபப் பணிகளை மேற்கொண்டு நடத்தி
மருள் ஆடி = மயக்க அறிவைப் பெற்று விளையாடி = காம விளையாட்டுக்கள் ஆடி விழல் வாழ்வு = பயனற்ற வாழ்க்கையையே. சதமாகி = நிலையானது என்று கருதி வலுவாகி = அதிலேயே மனம் உறுதி பெற்று மட கூடமோடு = மாட கூடம் கொண்ட செல்வனாய் பொருள் தேடி = பொருளைத் தேடி.
வாசனை புழுகு ஏடு
மலரோடு மனமாகி மகிழ்
வாசனைகள் ஆதி இடல்
ஆகி மயலாகி விலை
மாதர்களை மேவி அவர் ஆசை
தனில் சுழல சில நாள் போய்
வாச புழுகு = நறு மணம் உள்ள புனுகு ஏடு
மலரோடு = இதழ்களோடு கூடிய மலர்களில் மனமாகி = மனத்தைச் செலுத்தியவனாக மகிழ் = மிகிழ்ச்சியுடன் வாசனைகள் ஆதி வாசனைப் பொருள்கள் முதலியவற்றை இடலாகி = அணிந்தவனாய் மயலாகி = காமப்
பற்றைக் கொண்டு விலை மாதர்களை மேவி = பொது
மகளிரை விரும்பி அவர் ஆசை தனிலே = அவர்கள்
மீது மோகம் கொண்டு சுழல = (அவர்கள் பின்) சுழல
சில நாள் போய் = (அங்ஙனம்) சில நாட்கள் கழிய.
தோல் திரைகள் ஆகி
நரையாகி குருடாகி இரு
கால்கள் தடுமாறி
செவி மாறி பசு பாச பதி
சூழ் கதிகள் மாறி
சுகம் மாறி தடியோடு திரி உறு நாளில்
தோல் திரைகளாகி = உடலில் தோல் சுருங்கலுற்று
நரையாகி = மயிர் வெண்ணிறம் பூண்டு குருடாகி = கண்கள் பார்வை இழந்து இரு கால்கள் தடுமாறி = இரண்டு கால்களும் தடுமாற்றம் அடைந்து. செவி மாறி = காதுகள் கேட்கும் தொழில் அற்று பசு பாச பதி = உயிர், தளை, கடவுள்
என்னும் முதற் பொருள்களைப் பற்றிய சூழ் கதிகள் = அறிவு யாவும் மாறி = மறைதலுற்று
சுகம் மாறி = சுகமெல்லாம் கெட்டு தடியோடு = (கையில்) தடி ஏந்தி திரியுறு நாளில் = திரிகின்ற முதுமைப் பருவத்தில்.
சூலை சொறி ஈளை வலி
வாதமோடு நீரிழிவு
சோகைகள் மாலை
சுரமோடு பிணி தூறிருமல்
சூழல் உற மூல
கசுமாலம் என நாறி உடல் எழுவேனோ
சூலை = சூலை நோய் சொறி = சொறி நோய். ஈளை = கோழை
வலி வாதமோடு = இழுப்பு, வாயு
மிகுதலால் வரும் பிணிகள் நீரிழிவு = நீரிழிவு.
சோகைகள் = இரத்தமின்மையால் வரும் சோகை மாலை = கண்ட மாலை சுரமோடு சூழ் = வெப்பு
இவைகளுடன் சேர்ந்துள்ள தூறிருமல் = கிளைத்தெழுகின்ற
இருமல் சூழல் உற = இவை எல்லாம் சூழ்ந்து பற்றி
மூல = அடிக்காரணமாகிய கசுமாலம் என = ஆபாசம் என்னும்படியான நாறி உடல் = இந்த உடல் துர் நாற்றம் அடைந்து. அழிவேனோ = மடிந்து போவேனோ?
நாலுமுகம் ஆதி அரி
ஓம் என ஆதாரம் உரையாத
பிரமாவை விழ மோதி
பொருள் ஓதுக என
நாலு சிரமோடு சிகை
தூளிபட தாளம் இடு இளையோனே
நாலு முகன் = நான்கு முகங்களைக் கொண்டவனும்
ஆதி அரி ஓம் என ஆதாரம் =யாவற்றுக்கும் ஆதாரமான பொருளைஉரையாத பிரமாவை = சொல்லத் தெரியாதவனுமாகிய பிரமனை விழ மோதி = விழும்படித்
தாக்கி பொருள் ஓதுக என = சரியான பொருளைச்
சொல்லுக என்று நாலு சிரமோடு = அவனுடைய நான்கு
முகங்களுடன் சிகை தூளி பட = குடுமியும்
சிதறுண்டு அலைய தாளம் இடு இளையோனே = தாளமிடுவது போல் குட்டிய இளையவனே.
நாறு இதழி வேணி
சிவ ரூபக கல்யாணி முதல்
ஈண மகவானை மகிழ்
தோழ வனம் மீது செறி
ஞான குற மாதை தினை
காவில் புகழ் மயில் வீரா
நாறு இதழி = நறு மணம் வீசும் கொன்றையை அணிந்த.
வேணி = சடையை உடைய. சிவ ரூப = சிவபெருமானுடைய பாகத்தில் அமைந்துள்ள கலியாணி = பார்வதி முதல் ஈண = முதலில்
ஈன்ற மகவு யானை = குழந்தையாகிய கணபதி
மகிழ் = மகிழும் தோழ = சகோதர நண்பனே வனம் மீது செறி = (வள்ளி மலைக்) காட்டில் பொருந்தி இருந்த ஞான குற
மாதை = ஞானக் குற மாதாகிய வள்ளியை தினை காவில்
= தினைப் புனச் சோலையில் மணம் மேவும் = மணம் பூண்ட புகழ் மயில் வீரா = புகழைக் கொண்ட மயில் வீரனே.
ஓலம் இடு தாடகை
சுவாகு வளர் ஏழு மரம்
வாலியோடு நீலி
பகனோடு ஒரு விராதன் எழும்
ஓத கடலோடு விறல் ராவண குழாம் அமரில்
பொடியாக
ஓலம் இடு தாடகை = கூச்சலிட்டு வந்த தாடகை.
சுவாகு = சுவாகு வளர் ஏழு மரம் = வளர்ந்திருந்த மரா மரங்கள் ஏழு வாலியோடு = வாலி மற்றும் நீலி பகனோடு = நீலி, பகன். ஒரு = ஒப்பற்ற விராதன் = விராதன்
எழு = எழுந்து மோத கடலோடு = அலைகள் விசும் கடல் இவைகளுடன் விறல் = வலிமை வாய்ந்த. ராவணன் குழாம் = இராவணனுடைய கூட்டம். அமரில் பொடியாக = போரில் இறந்து பொடிபட்டழிய.
ஓகை தழல் வாளிவிடு
மூரி தநு நேமி வளை
பாணி திரு மார்பன்
அரி கேசன் மருகா எனவே
ஓத மறை ராமேசுர
மேவும் குமரா அமரர் பெருமாளே.
ஓகை = களிப்புடன் தழல் வாளி விடு = நெருப்பு அம்பை வீசும் கையை உடையவன் மூரி தநு = வலிமை வாய்ந்த வில் நேமி = சக்கரம்
வளை = சங்கு. பாணி = (இவைகளைக்)
கையில் ஏந்தியவன். திரு மார்பன் = இலக்குமியை
மார்பில் உடையவன் அரி = அரி. கேசன் = கேசவன் (ஆகிய திருமாலின்). மருகா = மருகனே எனவே = என்று
மறை ஓத = வேதங்கள் ஓதிப் புகழும் ராமேசுரம்
மேவும் குமரா = இராமேசுரத்தில் வீற்றிருக்கும்
குமரனே அமரர் பெருமாளே = தேவர்கள் பெருமாளே.
சுருக்க உரை
கட்டிளமை வயதை அடைந்து, மன்மதன் போல் அழகு உடையவனாகி, பல வாணிபத் தொழில்களை மேற்கொண்டு, பொருள் தேடி, மயக்க அறிவைப் பெற்று, விலை மாதர்களுடன் வீண் காலம் கழித்து, பயனற்ற வாழ்க்கையை விரும்பி, அங்ஙனமே பல நாள் கழிய, உடலில் தோல் சுருங்கி, மயிர் நரைத்து, கால்கள் தடுமாறி, கண்கள் குடுடாகி, காது செவிடாகி, பசு, பதி, பாசம் என்னும் அறிவு வழிகள் யாவையும் மறைதலுற்று, பல வகையான பிணிகளால் பீடிக்கப்பட்டு, உடல் துர்நாற்றம் அடைந்து, நான் இறந்து படுவேனோ?
நான்கு முகங்களைக் கொண்ட பிரமன் எல்லாவற்றுகும்
ஆதாரமாயுள்ள அரி ஓம் என்னும் சொல்லுக்குப் பொருள் கூற முடியாமல் விழிக்க, அவனுடைய தலையில் அழுந்தக் குட்டிய இளையோனே. கொன்றையைச்
சடையில் தரித்த சிவபெருமானின் இடப் பாகத்தில் உறையும் பார்வதி பெற்ற மூத்த பிள்ளையாகிய
கணபதி மகிழும் சகோதர நண்பனே. வள்ளி மலைக் காட்டில் தினைப் புனம் காத்த வள்ளியை மணம்
புரிந்த மயில் வீரனே. கூச்சலிட்டு வந்த தாடகை மற்றும் பல இராவணனின் கூட்டங்களைப் போரில்
அழித்தவனும், கையில் வில், சக்கரம், சங்கு இவைகளை ஏந்தியவனும், இலக்குமி வாசம் செய்யும் மார்பனும் ஆகிய திருமாலின் மருகனே. வேதங்கள் ஓதிப் புகழும்
ராமேசுரத்தில் வீற்றிருக்கும் குமரனே. தேவர் பெருமாளே. தீ நெறியில் ஈடுபட்டு, உடல் கெட்டு நான் அழியலாமோ?
1. தடியொடு திருயுறு நாளிற்....
தடி கொண்டு குரங்கெனவே நடந்து சொல்
...திருப்புகழ்,காராட.
2. ஆதாரம் உரையாத பிரமாவை....
மறையன்றலை யுடையும்படி நடனங்கொளு மாழைக் கதிர்வேலா
... - திருப்புகழ், முகசந்தி
தூமறைக் கெலாம் ஆதியும் அந்தமும் சொல்லும்
ஓமெனப்படும் ஓரெழுத் துண்மையை உணரான்
மாமலர்ப் பெருங் கடவுளும் மயங்கினான் ...கந்த புராணம்
3. தாடகை சுவாகு.....
வெடுத்த தாடகை சினத்தை யோர்கணை
விடுத்து யாகமும் நடத்தி யேயொரு
மிகுத்த வார்சிலை
முறித்தா மாயவன் மருகோனே
...திருப்புகழ் தொடுத்தவாளெ.
வேள்விச் சாலைய ளித்தல்பொ ருட்டெதிர்
காதத் தாடகை யைக்கொல்க்ரு பைக்கடல் மருகோனே.
.
.திருப்புகழ் வேலைப்போல்
4. ஏழு மரம்.....
வடிவுடைய மானு மிகல்கர னுந்திக
ழெழுவகை மராமரமு நிகரொன்றுமில்
வலியதிறல் வாலி யுரமுநெ டுங்கட லவையேழும்
....திருப்புகழ், விடமும்வடி
5. பகன்..
கண்ணனைக் கொல்ல கம்சனால் அனுப்பப்பட்ட கொக்கு உருக் கொண்ட
அரக்கன். இவன் கண்ணனால் வாய் பிளவுண்டு இறந்தான்.
பள்ளத்தில் மேயும் பறவை யுருக் கொண்டு
கள்ள அசுரன் வருவானைத் தான்கண்டு
புள்ளிது என்று பொதுக்கோ வாய்கீண்டிட்ட பிள்ளை..
.பெரியாழ்வார்
6. கடலோடு....
பரவை பரவை கொல் பரவை வண அரி
பரவு மிமையவர் பெருமாளே ... .திருப்புகழ், குழலடவி.
விளக்கக் குறிப்புகள்
விராதன்... இவன் வீணை வாசிக்கும் தும்புரு என்னும் கந்தருவன். ரம்பையுடன்
காம விகாரத்தால் ஊடல் கொள்ள குபேரன் இவனை அரக்கனாகும்படி சபித்தான்
No comments:
Post a Comment
Your comments needs approval before being published