225
கோடை நகர்
(ஸ்ரீ பெரம்பலூரிலிருந்து 10 கிமீ
தொலைவில்)
பாதமலர் சேர அன்பு தருவாயே
தானதன தான தந்த தானதன தான தந்த
தானதன தான தந்த தனதான
சாலநெடு நாள்ம டந்தை காயமதி லேய லைந்து
சாமளவ
தாக வந்து புவிமீதே
சாதகமு மான பின்பு சீறியழு தேகி டந்து
தாரணியி லேத வழந்து விளையாடிப்
பாலனென வேமொ ழிந்து பாகுமொழி மாதர் தங்கள்
பாதரன மீத ணைந்து பொருள்தேடிப்
பார்மிசையி லேயு ழன்று பாழ்நரகெய் தாம
லொன்று
பாதமலர்
சேர அன்பு தருவாயே
ஆலமமு தாக வுண்ட ஆறுசடை நாதர் திங்கள்
ஆடரவு பூணர் தந்த முருகோனே
ஆனைமடு வாயி லன்று மூலமென வோல மென்ற
ஆதிமுதல் நார ணன்றன் மருகோனே
கோலமலர் வாவி யெங்கு மேவுபுனம் வாழ்ம டந்தை
கோவையமு தூற லுண்ட குமரேசா
கூடிவரு சூர டங்க மாளவடி வேலெறிந்த
கோடைநகர் வாழ வந்த பெருமாளே
பதம் பிரித்து உரை
சால நெடு நாள் மடந்தை காயம் அதிலே அலைந்து
சா(கு)ம் அளவாக வந்து புவி மீதே
சால நெடு நாள் = மிகவும் நீண்ட நாட்கள் மடந்தை = ஒரு பெண்ணின் காயம் அதிலே = உடலில் (கருவில்) அலைந்து = அலைச்சலுற்று சா(கு)ம் அளவதாக வந்து = சாவும் அளவுக்குள்ள துன்பத்துக்கு ஆளாகி வந்து. புவி மீதே = இந்தப் பூமியில்.
சாதகமும் ஆன பின்பு சீறி அழுதே கிடந்து
தாரணியிலே தவழ்ந்து விளையாடி
சாதகமும் ஆன
பின்பு = பிறப்பு என்பதை அடைந்த பிறகு. சீறி அழுதே = பலமாக அழுது கிடந்து = கிடந்து தாரணியிலே = தரையில் தவழ்ந்து = தவழ்ந்து விளையாடி = விளையாடி.
பாலன் எனவே மொழிந்து பாகு மொழி மாதர் தங்கள்
பார தனம் மீது அணைந்து பொருள் தேடி
பாலன் எனவே மொழிந்து = பால உருவினனாய்ப் பேச்சுக்கள் பேசி பாகு மொழி = சர்க்கரை போல இனிக்கும் சொற்களைக் கொண்ட மாதர் தங்கள் = மாதர்களின் பார = பெருத்த தனம் மீது அணைந்து = கொங்கையின் மீது அணைந்து பொருள் தேடி = பொருள் தேட
வேண்டி.
பார் மிசையிலே உழன்று பாழ் நரகு எய்தாமல்
ஒன்று
பாத மலர் சேர அன்பு தருவாயே
பார் மிசையிலே உழன்று = பூமியிலே திரிந்து. பாழ் நரகு எய்தாமல் = பாழான நரகத்தில் போய்ச் சேராமல் ஒன்று = பொருந்திய பாத மலர் சேர = (உனது) திருவடி மலரைச் சேர்வதற்கு அன்பு தருவாயே = அன்பைத்
தந்து அருளுக.
ஆலம் அமுதாக உண்ட ஆறு சடை நாதர் திங்கள்
ஆடு அரவு பூணர் தந்த முருகோனே
ஆலம் அமுதாக = ஆலகால விடத்தை
அமுதமாக உண்ட = உண்ட ஆறு சடை நாதர் = கங்கை ஆற்றைச் சடையில்
சூடிய நாதரும் திங்கள் = சந்திரனையும் ஆடு அரவு = படமெடுத்து ஆடும் பாம்பையும் பூணர் = பூண்டுள்ளவரும் (ஆகிய சிவபெருமான்) தந்த முருகோனே = அருளிய முருகனே.
ஆனை மடுவாயில் அன்று மூலம் என ஓலம் என்ற
ஆதி முதல் நாரணன் தன் மருகோனே
ஆனை மடுவாயில்
அன்று = யானையாகிய கஜேந்திரன் அன்று மடுவில் மூலமே
என ஓலம் என்ற = ஆதி மூலமே என்றும், நீயே
அடைக்கலம் என்றும் (கூவி அழைக்கப் பட்ட) ஆதி முதல் நாரணன் தன் = ஆதி முதல்வனான நாராயண மூர்த்தியின். மருகோனே = மருகனே.
கோல மலர் வாவி எங்கும் மேவி புனம் வாழ்
மடந்தை
கோவை அமுது ஊறல் உண்ட குமரேசா
கோல மலர் வாவி எங்கும் = அழகிய மலர்த் தடாகங்கள் எங்கும் மேவு = நிறைந்த புனம் வாழ் மடந்தை = தினைப் புனத்தில் வாழ்ந்த பெண் வள்ளியின் கோவை அமுது ஊறல் = கொவ்வைக் கனி போன்ற வாயின்
அமுதூறலை உண்ட குமரேசா = உண்ட குமரேசனே
கூடி வரு சூர் அடங்க மாள வடி வேல் எறிந்த
கோடை நகர் வாழ வந்த பெருமாளே.
கூடி வரு சூர்
அடங்க மாள = இரண்டு கூறாகியும் ஒன்று கூடி வந்த சூரன் அடங்கி ஒடுங்க வடிவேல் எறிந்த = கூரிய வேலைச் செலுத்திய கோடை நகர் வாழ வந்த = கோடை நகரில் வாழ வந்த பெருமாளே = பெருமாளே.
சுருக்க உரை
நீண்ட நாட்களாகத் தாயின் கருவறையில் கிடந்து, தக்க சமயத்தில் பூமியில் பிறந்து, அழுது, கிடந்து, தவழ்ந்து, விளையாடி, கொஞ்சிப் பேசி, மாதர்களின் கொங்கை மீது அணைந்து, பொருள் தேடி, அங்குமிங்கும் திரிந்து, நரகில் போய்ச் சேராமல், உனது திருவடி மலரைச் சேர்வதற்குரிய அன்பைத் தருவாயாக.
விடத்தையும் அமுதமாக உண்டவர், கங்கையையும் சடையில் தரித்தவர், பிறைச் சந்திரனையும், பாம்பையும் பூண்டவர், ஆகிய சிவ பெருமான் பெற்ற முருகனே, யானை
மடுவில் அடைக்கலம் என்று ஓலமிட அதற்கு உதவிய ஆதி முதல்வனாகிய நாராயணின் மருகனே, அழகிய
தடாகங்கள் சூழ்ந்த தினைப் புனத்தில் வாழும்
வள்ளியின் வாயிதழ் ஊறலை உண்ட குமரேனே, இரண்டு கூறாகியும் ஒன்று சேர்ந்து வந்த சூரனை
அடக்கி ஒடுக்கக் கூரிய வேலைச் செலுத்தியவனே, கோடை நகரில் வாழும் பெருமாளே, உனது பாத
மலர்களைத் தருவாயாக.
ஒப்புக
ஆனைமடு வாயிலன்று மூலமென வோல மென்ற.....
நுதிவைத்தக ராம லைந்திடு களிருக்கரு ளேபுரிந்திட
நொடியிற் பரிவாக வந்தவன் மருகோனே ..... திருப்புகழ், பகர்தற்கரிதான
வாரணத்தினையே கராவும்
மு(ன்)னே
வளைத்திடு போது மேவிய
மாயவற்கு இதமாக வீறிய
மருகோனே .............. திருப்புகழ், தாரணிக்கதி
கடகரி அஞ்சி நடுங்கி.....................................திருப்புகழ், சருவியிகழ்ந்து
இந்திராஜும்னன் எனும் மன்னன் மிகச்சிறந்த
விஷ்ணு பக்தனாக இருந்தான். சதா சர்வ காலமும் விஷ்ணு சிந்தனையிலேயே இருப்பான். விஷ்ணுவை
கும்பிடாமல் எந்த ஒரு செயலையும் செய்யமாட்டான். ஒரு நாள் அவன் இவ்வுலகத்தையே மறந்த நிலையில் விஷ்ணு பூஜை செய்து கொண்டிருந்தான்.
இது போன்ற நேரங்களில் யாரும் அவனை காண வருவதுமில்லை. இவனும் யாரையும் காண்பதுமில்லை.
இப்படி அவன் பூஜை செய்து கொண்டிருந்த வேளையில் கோபக்கார துர்வாச முனிவர்
அவனைக் காண வந்தார். இவர் வந்து வெகு நேரம்
ஆனது. ஆனாலும் மன்னன் தன் பக்திக்குடிலை விட்டு வெளியே வரவில்லை. பொறுத்து பொறுத்து
பார்த்த துர்வாசர், மன்னன் இருந்த குடிலுக்குள் சென்று அவன்
முன்னால் நின்றார். அப்போதும் கூட மன்னன் வந்திருப்பதை
அறியாமல் ஆழ்ந்த பக்தியில் மூழ்கியி ருந்தான்.
இதனால் முனிவர் கடும் கோபத்துடன் உரத்த குரலில்,""மன்னா!
நீ மிகவும் கர்வம் உள்ளவனாகவும், பக்தியில் சிறந்தவன் என்ற மமதை கொண்டவனாகவும்
இருப்பதாலும், நீ விலங்குகளில் மதம் பிடித்த யானையாக போவாய்,''என சபித்தார். முனிவர் போட்ட கடும் சத்தத்தினால்
கண்விழித்த மன்னன் அதிர்ந்து போனான். அவரிடம் மன்னிப்பும், பாபவிமோசனமும் கேட்டான். இவனது நிலையுணர்ந்த
முனிவர் அவன் மீது இரக்கம் கொண்டு,
""நீ யானையாக இருந்தாலும், அப்போதும் திருமால் மீது பக்தி கொண்ட கஜேந்திரனாக திகழ்வாய்'' என்று கூறினார். அத்துடன்,""ஒரு குளத்தில் உள்ள முதலை உனது காலை பிடிக்கும்.
அப்போது நீ "ஆதிமூலமே!' என மகாவிஷ்ணுவை அழைக்க, அவர் ஓடி வந்து உன்னை காப்பாற்றி, உனக்கு மோட்சமும், சாப விமோசனமும் கிடைக்கும், ''என்றார். ஒரு முறை கூஹு என்னும் அரக்கன்
குளத்தில் வாழ்ந்து வந்தான். அவன் தண்ணீரில் இருந்து கொண்டு அங்கு வந்து குளிப்போரின்
காலைப்பிடித்து இழுத்து துன்புறுத்துவதையே தொழிலாக கொண்டிருந்தான். ஒரு முறை அகத்திய
மாமுனிவர் சிவனின் கட்டளைப்படி தென்திசை நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது சிவ
பூஜை செய்யும் நேரம் வந்தது.அருகிலிருந்த குளத்தில் நீராடினார். அங்கு இருந்த அரக்கன்
அகத்தியரின் காலைப்பிடித்தான். இதனால் அகத்தியர் கடும் கோபம் கொண்டார். அவர், "நீ வருபவர்களையெல்லாம் காலைப்பிடித்து இழுப்பதால், முதலையாக மாறுவாய்,''என சபித்தார். அவன் அகத்தியரிடம் சாப விமோசனம்
கேட்டான். அகத்தியர்,"கஜேந்திரன் என்ற யானை இந்த குளத்திற்கு
வரும் போது நீ அதன் காலைப்பிடிப்பாய், அப்போது அதைக்காப்பாற்ற திருமால் வருவார்.
அவரது சக்ராயுதம் பட்டு உனக்கு சாப விமோசனம் கிடைக்கும்''என்றார். இந்த கபிஸ்தத்தின் கோயில் முன்பு கிழக்கு திசையில் உள்ள கபில தீர்த்தத்தில் ஒரு நாள் கஜேந்திரன் நீர் அருந்த
இறங்கியது. இதைக்கண்ட முதலை யானையின் காலைக்
கவ்வியது."ஆதிமூலமே! காப்பாற்று' என யானை கத்தியவுடன் கருட வாகனத்தில் லட்சுமி
சமேதராக விஷ்ணு வந்து, சக்ராயுதத்தால் முதலையை அழித்து கஜேந்திரனுக்கு மோட்சமளித்ததாக
வரலாறு.
கூடிவரு சூரடங்க மாள வடிவேல்......
மாமரமாய்
நின்ற சூரனது உடல் வேலால் தடியப்பட்டு விழுந்தும் அவன் தவச் சிறப்பால் கூறுபட்ட உடல்
ஒன்று கூடிட பழைய உருவத்துடன் சூரன் போருக்கு வந்தான். வேல் அவன் உடலை மறு முறையும்
கிழித்து இரு கூறாக்கிற்று.
சூருரங் கிழித்துப் பின்னும் அங்கம திருகூறாக்கி
எஃகம் வான் போயிற்றம்மா.. ............... .கந்த
புராணம்
No comments:
Post a Comment
Your comments needs approval before being published