Sunday 8 June 2014

262.கல கல என

262
திருவக்கரை

திண்டிவனத்திலிருந்து புதுச்சேரி செல்லும் வழியில் மைலம் வழியாக பெரும்பாக்கம் என்ற இடத்தில் இருந்து 7 கி.மீ. தூரத்தில் உள்ளது

           தனதன தத்தன தனதன தத்தன
                 தனதன தத்தன                       தனதான

கலகலெ னச்சில கலைகள் பிதற்றுவ
     தொழிவ துனைச்சிறி                     துரையாதே
கருவழி தத்திய மடுவத னிற்புகு
     கடுநர குக்கிடை                          யிடைவீழா
உலகுத னிற்பல பிறவித ரித்தற
     வுழல்வது விட்டினி                      யடிநாயேன்
உனதடி மைத்திரள் அதனினு முட்பட
     வுபயம லர்ப்பத                         மருள்வாயே
குலகிரி பொட்டெழ அலைகடல் வற்றிட
     நிசிசர னைப்பொரு                        மயில்வீரா
குணதர வித்தக குமரபு னத்திடை
     குறமக ளைப்புணர்                      மணிமார்பா
அலைபுன லிற்றவழ் வளைநில வைத்தரு
     மணிதிரு வக்கரை                    வுறைவோனே
அடியவ ரிச்சையி லெவையெவை யுற்றன
     அவைதரு வித்தருள்                    பெருமாளே.

பதம் பிரித்தல்

கல கல என சில கலைகள் பிதற்றுவது
ஒழிவது உனை சிறிது உரையாதே

கல கல என = கல கல என்ற ஒலியுடன் சில கலைகள் = சில நூல்களைக் கற்று பிதற்றுவது = பலவாறு பேசுவதை ஒழிவது = ஒழித்து உனைச் சிறிது உரையாதே = உன்னைக் கொஞ்சமேனும் துதியாமல் 

கரு வழி தத்திய மடு அதனில் புகு
கடு நரகுக்கு இடை இடை வீழா

கரு வழி தத்திய = கருவில் புகுவதற்கு வேண்டிய வழியில் வேகமாகச் செலுத்தும் மடு அதனில் புகு = பள்ளத்தில் புகுந்து கடு = பொல்லாத  நரகுக்கிடை இடை வீழா = நரகத்தின் மத்தியில் வீழாமல்

உலகு தனில் பல பிறவி தரித்து அற
உழல்வது விட்டு இனி அடி நாயேன்

உலகு தனில் = உலகிலே பல பிறவி தரித்து = பல பிறப்புக்களை எடுத்து அற உழல்வது = மிகவும் திரிதலை. விட்டு = கை விட்டு இனி = இனியேனும் அடிநாயேன் = அடி நாயேனாகிய நான் 

உனது அடிமை திரள் அதனினும் உட்பட
உபய மலர் பதம் அருள்வாயே

உனது அடிமைத் திரள் அதனில் = உன்னுடைய அடியார் கூட்டத்திலும் உட்பட = உட்பட்ட ஒருவனாக உபய = (உனது) இரண்டு மலர்ப் பாதம் அருள்வாயே = மலர்ப் பாதங்களை அருள்வாயாக.

குலகிரி பொட்டு எழ அலைகடல் வற்றிட
நிசிசரனை பொரு மயில் வீரா

குல கிரி = கூட்டமான (எழு) மலைகள் பொட்டு எழ = தொளைபட்டுப் பொடிபடவும் அலைகடல் வற்றிட = அலைகளை உடைய கடல் வற்றிப் போகவும் நிசிசரனைப் பொரு = அசுரனாகிய சூரனோடு சண்டை செய்த மயில் வீரா = மயில் வீரனே.

குண தர வித்தக குமர புனத்திடை
குற மகளை புணர் மணி மார்பா

குண தர = நற் குணத்தவனே வித்தக = ஞான மூர்த்தியே குமர = குமரனே புனத்து இடை = தினைப் புனத்திடையே குற மகளை = குற மகள் வள்ளியை புணர் = புணர்ந்த மணி மார்பா = மணிமார்பனே.

அலை புனலில் தவழ் வளை நிலவை தரு
மணி திருவக்கரை உறைவோனே

அலை புனலில் தவழ் = அலை வீசும் நீரில் தவழ்கின்ற வளை நிலவைத் தரு = சங்குகள் ஒளியை வீசுகின்ற மணி = அழகிய திருவக்கரை உறைவோனே = திருவக்கரையில் வீற்றிருப்பவனே

அடியவர் இச்சையில் எவை எவை உற்றன
அவை தருவித்து அருள் பெருமாளே.

அடியவர் = அடியார்களுடைய இச்சையில் = ஆசையில் எவை எவை உற்றன = என்ன என்ன ஆசைகள் உள்ளனவோ அவை தருவித்து அருள் பெருமாளே = அவற்றை வரவழைத்துப் பூர்த்தி செய்யும் கருணை வாய்ந்த பெருமாளே

சுருக்க உரை

சிற்சில நூல்களைக் கற்றுப் பலவாறு பிதற்றுவது ஒழிந்து, உன்னைக் கொஞ்சமேனும் துதியாமல், கருவில் புகுவதற்கு உரிய வழியில் செலுத்தும் மடுவில் வீழ்ந்து, பலபிறவிகள் எடுக்கும் நாயேனாகிய அடியேன்,  அடியார்கள் கூட்டத்தில் சேர உனது இரண்டு மலர்ப் பாதங்களை அருள்வாயாக. ஞான மூர்த்தியே, குமரனே, தினைப்புனத்திடையே வள்ளியை அணைந்தவனே, நீர் நிலைகளில் சங்குகள் ஒளி வீசும் திருவக்கரையில் உறைபவனே, அடியார்கள் ஆசைகள் அனைத்தையும் பூர்த்தி செய்யும்
கருணை மிகுந்த பெருமாளே, என்னை அடியார்கள் கூட்டத்தில் ஒன்று  சேர்ப்பாயாக.


1உனது அடிமைத்திரள் அதனினும் உட்பட......

இடுதலைச் சற்றும் கருதேனைப்
போதம்இ லேனையன்பால்
கெடுதல் இலாத்தொண் டரில்கூட் யவா....            கந்தர் அலங்காரம்                                             

2 குலகிரி பொட்டெழ.....

பொட்டாக் வெற்பைப் பொருதகந்
தா தப்பிப் போனதொன்றற்கு) ----                        கந்தர் அலங்காரம்  

துரும்பினே என்னினும் கைவிடுதல் நீதியோ
தொண்டரொடு கூட்டுகண்டாய்
சுத்தநிகர்க் குணமான பரதெய்வ மேபரம்  ஜோதியே சுகவாரியே---        தாயுமானவர், சுகவாரி .  



No comments:

Post a Comment

Your comments needs approval before being published