Wednesday 22 August 2012

6.உனைத்தினம்


உனைத்தி னந்தொழு திலனுன தியல்பினை
         உரைத்தி லன்பல மலர்கொடுன் அடியிணை
         உறப்ப ணிந்திலன் ஒருதவ மிலனுன                     தருள்மாறா
 உளத்து ளன்பினர் உறைவிடம் அறிகிலன்
        விருப்பொ டுன்சிக ரமும்வலம் வருகிலன்
         உவப்பொ டுன்புகழ் துதிசெய விழைகிலன்       மலைபோலே
 கனைத்தெ ழும்பக டதுபிடர் மிசைவரு
        கறுத்த வெஞ்சின மறலிதன் உழையினர்
        கதித்த டர்ந்தெறி கயிறடு கதைகொடு                     பொருபோதே
 கலக்கு றுஞ்செயல் ஒழிவற அழிவுறு
        கருத்து நைந்தல முறுபொழு தளவைகொள்
        கணத்தில் என்பய மறமயில் முதுகினில்            வருவாயே
 வினைத்த லந்தனில் அலகைகள் குதிகொள
        விழுக்கு டைந்துமெய் உகுதசை கழுகுண
        விரித்த குஞ்சியர் எனுமவு ணரைஅமர்                   புரிவேலா
 மிகுத்த பண்பயில் குயில்மொழி அழகிய
        கொடிச்சி குங்கும முலைமுக டுழுநறை
        விரைத்த சந்தன ம்ருகமத புயவரை                         உடையோனே
 தினத்தி னஞ்சதுர் மறைமுநி முறைகொடு
       புனற்சொ ரிந்தலர் பொதியவி ணவரொடு
        சினத்தை நிந்தனை செயுமுநி வரர்தொழ             மகிழ்வோனே
 தெனத்தெ னந்தன எனவரி யளிநறை
       தெவிட்ட அன்பொடு பருகுயர் பொழில்திகழ்
        திருப்ப ரங்கிரி தனிலுறை சரவண                              பெருமாளே.
 
பதம் பிரித்தல்

உனை தினம் தொழுதிலன் உனது இயல்பினை
உரைத்திலன் பல மலர் கொடு உன் அடி இணை
உற பணிந்திலன் ஒரு தவம் இலன் உனது அருள் மாறா

(ள்)ளத்து உள் அன்பினர் உறைவிடம் அறிகிலன்
விருப்பொடு உன் சிகரமும் வலம் வருகிலன்
உவப்பொடு உன் புகழ் துதி செய விழைகிலன் மலைபோலே

கனைத்து எழும் பகடு அது பிடர் மிசை வரும்
கறுத்த வெம் சின மறலி தன் உழையினர்
கதித்து அடர்ந்து எறி கயிறு அடு கதை கொடு பொரு போதே

கலக்குறும் செயல் ஒழிவு அற அழிவு உறு
கருத்து நைந்து அலம் உறும் பொழுது அளவை கொள்
கணத்தில் என் பயம் அற மயில் முதுகினில் வருவாயே

வினைத் தலம் தனில் அலகைகள் குதி கொள
விழுக்கு உடைந்து மெய் உகு தசை கழுகு (ண்)
விரித்த குஞ்சியர் எனும் அவுணரை அமர் புரி வேலா

மிகுத்த பண் பயில் குயில் மொழி அழகிய
கொடிச்சி குங்கும முலை முகடு உழு நறை
விரைத்த சந்தன ம்ருகமத புய வரை உடையோனே

தினம் தினம் சதுர் மறை முநி முறை கொடு
புனல் சொரிந்து அலர் பொதிய வி(ண்)ணவரொடு
சினத்தை நிந்தனை செயு(ம்) முநிவரர் தொழ மகிழ்வோனே

தெனத் தெனந்தன என வரி அளி நறை
தெவிட்ட அன்பொடு பருகு உயர் பொழில் திகழ்
திருப்பரங்கிரி தனில் உறை சரவண பெருமாளே.


  பத உரை

(ன்)னைத் தினம் தொழுதிலன் = உன்னை (நான்) நாள் தோறும்தொழுவதும் இல்லை.
இயல்பினை = (உன்னுடைய) தன்மைகளை.
உரைத்திலன் = (எடுத்து) உரைப்பதும் கிடையாது.
பல மலர் கொடு = பலவிதமான மலர்களால்.
உன் அடியிணை = உனது இரு திருவடிகளை.
உற = பொருந்த.                                                        பணிந்திலன் = பணிவதும் இல்லை.
ஒரு தவம் இலன் = ஒரு வகையான தவமும் செய்யவில்லை.
உனது அருள் மாறா = உன்னுடைய அருள் நீங்காத.

(ள்)ளத்து உள் அன்பினர் = உள்ளத்தை உள்ள அன்பர்கள்.
உறைவிடம் அறிகிலன் = இருக்கும் இடத்தை அறிகின்றதும் இல்லை. விருப்பொடு = விருப்பத்துடன்.
உன் சிகரமும் = நீ வீற்றிருக்கும் மலையை.
வலம்வருகிலன் = சுற்றி வலம் வருவதும் இல்லை.
உவப்பொடு நின் புகழ் =மகிழ்ச்சியுடன் உன்னுடைய புகழை.
துதி செய விழைகிலன் = துதிக்க விருப்பம் கொள்ளுவதும் இல்லை.

கனத்தே எழும் = கனைத்துக் கொண்டு வருகின்ற.
பகடு பிடர் மிசை =எருமையின் கழுத்தின் மீது.
வரு = வருகின்ற.                                                    கறுத்த = கரிய நிறமும்.
வெம் சினம் = கொடுங் கோபமும் உள்ள.
மறலி தன் உழையினர் = யமன் உடன் இருப்பவர்கள்.
கதித்து = விரைந்து.                                              அடர்ந்து = (என் முன் தோன்றி)நெருங்கி.
எறி கயிறு = எறிகின்ற கயிறு கொண்டும்.
அடு = வருத்தும்                                                      கதை கொடு = கதையைக் கொண்டும்.
பொருபோதே = (என்னுடன்)போர் செய்கின்ற போது.

கலக்கு உறும் செயல் = கலக்கம் உண்டு செய்யும் செயலிலும்.
ஒழிவற= ஓய்தல் இல்லாமல்.                                 அழிவுறு = அழிவுறும்.
கருத்து = எண்ணமும்.                                       நைந்து = நைந்து போய்.
அலம் உறு பொழுது = நான் துன்புறும் போது.
அளவை கொள் கணத்தில் = ஒரு கண அளவில்.
என் பயம் அற =என்னுடைய பயம் நீங்க.
மயில் முதுகினில் = மயிலின் முதுகினில்.
வருவாயே = நீ வருவாயாக.

வினைத் தலம் தனில் = போர்க்களத்தில்.
அலகைகள் = பேய்கள்.                                     குதிகொள = கூத்தாடுவதால்.
விழுக்கு உடைந்து = (பிணங்களின்) மாமிசம்உடைந்து .

மெய் உகு தசை = உடலினின்று சிதறிய மாமிசத்தை
. கழுகுஉ(ண்) = கழுகுகள் சாப்பிட.
விரித்த குஞ்சியர் = விரித்த தலைமயிரை உடையவர்.
எனும்  அவுணர் = என்னும் அரக்கர்களோடு.
அமர்புரி வேலா = சண்டை செய்கின்ற வேலனே.

மிகுத்த பண் பயில் = மிக்க பண்களைப் பயிலும்.
குயில் மொழி = குயில்போன்ற மொழியை உடையவளும்.
அழகிய கொடிச்சி = அழகிய  கொடிபோன்ற வள்ளி நாயகியின்.
குங்கும = குங்குமம் அணிந்த.
முலை முகடுஉழு நறை விரைத்த = முலை மீது அழுந்திப் படும் நறு மணம் கலந்த
சந்தன ம்ருகமத = சந்தனமும் கத்தூரியும் அணிந்த.
புய வரைஉடையவனே = மலை போன்ற புயங்களை உடையவனே.

தினம் தினம் = நாள் தோறும்.                     சதுர் மறை = நான்கு வேதமும்.
முநி = பிரமன்.                                                           முறைகொடு = விதிப்படி.
புனல் சொரிந்து = நீராடி.
அலர் பொதிய = பூக்களை நிறைய இட.
வி(ண்)ணவரொடு  = தேவர்களுடன்.
சினத்தை நிந்தனை செயு முநிவரர் = வெகுளியை வென்ற முனிவர்கள்.
தொழ மகிழ்வோனே = தொழ மகிழ்பவனே.
தெனத்தெனந்தன = இத்தகைய ஒலியுடன்.
வரி = கோடுகள் உள்ள.                                     அளி = வண்டுகள்.
நறை = தேனை.                                                       தெவிட்ட = தெவிட்டும் அளவுக்கு.
அன்பொடு பருகு = ஆசையுடன் உண்ணும்.
உயர் பொழில் திகழ் = சிறப்பான சோலைகள் விளங்கும்.
திருப்பரங்கிரி தனில் உறை = திருப்பரங்கிரி என்னும் நகரில் வீற்றிருக்கும்.
சரவண பெருமாளே = சரவண மூர்த்தியே.

சுருக்க உரை

நான் தினமும் உன்னைத் தொழாதவன். உன் பண்புகளை எடுத்து உரைப்பதும் இல்லை. ஒருவித தவமும் செய்யாதவன். உன் புகழைத் துதிக்கவும் விருப்பம் கொள்ளாதவன்.  நான் இத்தகைய இழி குணம் படைத்தவன் ஆயினும், கொடுங்கோபம் கொண்ட யமன் வரும்போது ஒரு கண அளவில் மயில் மீது வந்து என் பயம் நீங்க நீ வரவேண்டும்

போர்க்களத்தில் பேய்களும், கழுகுகளும் மாமிசத்தை உண்ணும்படி அசுரர்களோடு போர் புரிந்த வேலனே. வள்ளி நாயகியின் கொங்கைகளைத் தழுவும் கரங்களை உடையவனே. முனிவர்கள் தொழு மகிழ்பவனே. வண்டுகள் பாடும் சோலைகள் விளங்கும் திருப்பரங் குன்றத்தில் உறையும் சரவண மூர்த்தியே. யமன் வரும்போது என் பயம் நீங்க மயில் மீது வருவாயாக.

 விளக்கக் குறிப்புகள்
 . உனைத் தினம் தினம்...
   ( கைகாள் கூப்பித் தொழீர் கடிமாமலர் தூவிநின்று
   பைவாய்ப் பாம்பனை யார்த்த பரமனைக் கைகாள் கூப்பித்
    தொழீர்...)- திருநாவுக்கரசர் தேவாரத் திருமுறை 4-9-7.
  . பலமலர் கொடு...
   ( உண்பதன் முன் மலர் பறித்து இட்டு உண்ணார் ஆகில்..) ---
   திருநாவுக்கரசர் தேவாரத் திருமுறை 6-95-6.
   (புண்ணியஞ் செய்வார்க்குப் பூவுண்டு நீருண்டு..)-திருமந்திரம் 1797.
 . ஒருதவமிலன்.....
  (  அழலுக்குள் வெண்ணெ யெனவே யுருகிப் பொன்னம்பலத்தார்
  நிழலுக்குள் நின்றுதவம் உஞற்றாமல் நிட்டூரமின்னார்)—
   பட்டினத்தார் (திருத்தில்லை).  (உஞற்றல் –  செய்யல்)
   ( சரணகமலாலயத்தை அரை நிமிஷ நேரமட்டில்
  தவமுறை தியானம் வைக்க அறியாத)--  திருப்புகழ்

No comments:

Post a Comment

Your comments needs approval before being published