195
இலாபமில்
மனலோயம் பெற
தனாதன தனாதன தனாதன தனாதன
தனாதன தனாதனன தனதான
இலாபமில் பொலாவுரை சொலாமன தபோதன
ரியாவரு மிராவுபக லடியேனை
இராகமும் விநோதமு முலோபமு டன்மோகமு
மிலானிவ னுமாபுருஷ னெனஏய
சலாபவ மலாகர சசீதர விதாரண
சதாசிவ மயேசுரச கலலோக
சராசர வியாபக பராபர மநோலய
சமாதிய நுபூதிபெற நினைவாயே
நிலாவிரி நிலாமதி நிலாதவ நிலாசன
நியாயப ரிபாலஅர நதிசூடி
நிசாசர குலாதிப திராவண புயாரிட
நிராமய சரோருகர னருள்பாலா
விலாசுகம் வலாரெனு முலாசவி தவாகவ
வியாதர்கள் விநோதமகள் மணவாளா
விராவுவ யலார்புரி சிராமலை பிரான்மலை
விராலிம லைமீதிலுறை பெருமாளே
- 195 விராலிமலை
பதம் பிரித்து பத உரை
இலாபம் இல் பொலா உரை சொலா மன தபோதனர்
இயாவரும் இராவு பகல் அடியேனை
இலாபம் இல = ஒரு லாபமும் இல்லாத பொலா உரை =
பொல்லாத மொழிகளை சொலா = சொல்லாத மன = மனத்தை உடைய தபோதனர் = தவத்தினர்கள்
இயாவரும் = யாவரும் இராவு பகல் = இரவும் பகலும் அடியேனை = அடியேனாகிய
என்னை (குறித்து).
இராகமும் விநோதமும் உலோபமும் உடன் மோகமும்
இலான் இவனும் மா புருஷன் என ஏய
இராகமும் விநோதமும் = ஆசை, விளையாடல்களில்
இன்ப மகிழ்ச்சியும் உலோபமுடன் = ஈயாக்குணமும் மோகமும் = காம மயக்கம்
ஆகியவை இலான் = இல்லாதவன் இவனும் மா புருஷன் என = இவனும் ஒரு சற்புருஷன்
என்று சொல்லும் சொல் ஏய = பொருந்துமாறு.
ச(ல்)லாபம் அமல ஆகர சசீதர விதாரண
சதாசிவ மயேசுர சகல லோக
சல்லாபம் = இனிய குணத்தினனாக அமலாகர = பரிசுத்தத்துக்கு இருப்பிடமான
சசீதர= சந்திரனைத் தரித்த விதரண= கருணை நிறைந்த சதாசிவ மயேசுர =
சதாசிவ நிலையதாய் சகல லோக = சகல உலகங்களிலும் உள்ள.
சராசர வியாபக பராபர மநோலய
சமாதி அனுபூதி பெற நினைவாயே
சராசர வியாபக = எங்கும் எவற்றிலும் கலந்ததான. பராபர = பரம் பொருளாய்
உள்ள. மநோலய = மனம் ஓடுங்கிய. சமாதி அனுபூதி பெற = சமாதி அனுபூதி நிலையை
அடியேன் பெற. நினைவாயே = நினைந்து அருளுமாறு வேண்டுகின்றேன்.
நிலா விரி நிலா மதி நி(ல்)லாத அநில அசன
நியாய பரிபால அர நதி சூடி
நிலா விரி = சந்திர கிரணங்கள் விரிந்து பிரகாசிக்கின்ற. நிலா மதி = பிறைச்
சந்திரன் நி(ல்)லாத அநில(ம்) அசன(ம்) = நில்லாது அலைகின்ற காற்றைப் புசிக்கின்ற.
நியாய பரிபால அர = நியாய பரிபாலனம் செய்வதில் வல்ல ஆதிசேடனான பாம்பையும். நதி
= கங்கையையும். சூடி = சூடியவரும்.
நிசாசர குல அதிபதி ராவண புய அரிட
நிர ஆமய சரோருக அரன் அருள் பாலா
நிசாசுர = அரக்கர். குலாதிபதி = குலத்துக்குத்
தலைவனான இராவணனுடைய புய அரிட = தோள்களுக்குக் கேடு செய்பவரும் நிர ஆமய
= நோயற்ற மூர்த்தியும் சரோருக அரன் = தாமரையில் வீற்றிருப்பவருமான அரன் (சிவபெருமான்)
அருள் பாலா = பெற்ற மகனே.
வில் ஆசுகம் வலார் எனும் உலாச இதம் ஆகவம்
வியாதர்கள் விநோத மகள் மணவாளா
வில் ஆசுகம் = வில், அம்பு விடுதலில் வ(ல்)லார் எனும் = வல்லவர் என்னும் உலாச இத = மனக் களிப்பில் இன்பம்
கொண்டு ஆகவம் = போரிடும் வியாதர்கள்
= வேடர்களின் விநோத மகள் = அற்புத மகளாகிய வள்ளியின் மணவாளா
= கணவனே.
விராவு வயல் ஆர் புரி சிரா மலை பிரான் மலை
விராலி மலை மீதில் உறை பெருமாளே.
விரவு = பொருந்திய வயல் ஆர் புரி = வயலூர் சிரா
மலை = திரிசிரா மலை பிரான் மலை = கொடுங்குன்றம் இவைகளை இடமாகக் கொண்டு) விராலி
மலை மீதில் உறை = விராலி மலையில் வீற்றிருக்கும்.
பெருமாளே = பெருமாளே.
சுருக்க உரை
பொல்லாத மொழிகளைச் சொல்லாத பெரும் தவத்தினர்கள்
யாவரும் என்னைக் காம மயக்கம் முதலிய கெட்ட குணங்கள் இல்லாதவன், இவனும் ஒரு சற் புருஷன் என்று சொல்லும்படி, எங்கும் எதிலும் கலந்ததான பரம் பொருளாய்
உள்ள, மனம் ஒடுங்கிய சமாதி அனுபூதி நிலையை அடியேன்
பெற அருள்வாய்.
பிறையையும், கங்கையையும் பாம்பையும் சூடிய சிவபெருமான் அருளிய குழந்தையே.
வில் விடுவதில் வல்ல வேடர்கள் மகளான வள்ளியின் கணவனே. நான் மநோலய சமாதி அனுபூதி பெற
நினைவாயே.
ஒப்புக
1. இராவண
புராரிட....
சதுரன் வரையை எடுத்த நிருத னுடலை வதைத்து…….............. திருப்புகழ்,முகைமுளரி.
2. சரோருக
அரன்....
பதும மலரது மருவிய சிவனது.......சம்பந்தர் தேவாரம்.
சுடர்க் கமலப் போது அகம் சேர் புண்ணியனார்)-------------........................சம்பந்தர் தேவாரம்.
3. நிராமய....
ஆமயம் = நோய். நிராமயம் = நோயின்மை.
நிராமய புராதன பராபர வராம்ருத
நிராகுல சராதிகப் ப்ரபையாகி---------------------------...........................--திருப்புகழ்,
நிராமய.
4. மநோலய
சமாதிய னூதிபெற....
இவ்வடிகள் காணப்படும் மற்ற திருப்புகழ் பாடல்கள்.
நினையொ ணாதரு வானத யாபர
பதிய தானச மாதிம னோலயம் வந்து தாராய்-------....................-----—திருப்புகழ்,
தறையின்.
குரங்கை யொத்துழல் வேனோம னோலய மென்றுசேர்வேன்
-................--திருப்புகழ்,நிறைந்த துப்பிதழ்
அதரபா னமுதமுந் தவிரவே மவுனபஞ்
சரமனோ லய சுகந் தருவாயே.......................................................திருப்புகழ்,
கரவுசேர்
நிராமய பராபர புராதன பராவுசிவ......................................................சம்பந்தர் தேவாரம்.
No comments:
Post a Comment
Your comments needs approval before being published