Tuesday 19 March 2013

197. கரிபுராரி


197
விராலிமலை
ஞானம் பெற
        
          தனன தான தானான தனன தான தானான
          தனன தான தானான                      தனதான

       கரிபு ராரி காமாரி திரிபு ராரி தீயாடி
          கயிலை யாளி காபாலி                     கழையோனி
       கரவு தாச னாசாரி பரசு பாணி பானாளி
          கணமொ டாடி காயோகி                     சிவயோகி
       பரம யோகி மாயோகி பரிய ராஜ டாசூடி
          பகரொ ணாத மாஞானி                        பசுவேறி
       பரத மாடி கானாடி பரவ யோதி காதீத
           பரம ஞான வூர்பூத                         அருளாயோ
       சுருதி யாடி தாதாவி வெருவி யோட மூதேவி
           துரக கோப மீதோடி                           வடமேரு
       சுழல வேலை தீமூள அழுத ளாவி வாய்பாறி
           சுரதி னோடு சூர்மாள                       வுலகேழும்
       திகிரி மாதி ராவார திகிரி சாய வேதாள
           திரளி னோடு பாறோடு                      கழுகாடச்
       செருவி னாடு வானீப கருணை மேரு வேபார
            திருவி ராலி யூர்மேவு                      பெருமாளே


பதம் பிரித்தல் பத உரை


கரி புரம் ஆரி காம ஆரி திரி புரம் ஆரி தீ ஆடி
கயிலையாளி காபாலி கழை யோனி

கரி புர(ம்) அரி = யானையின் உடலை அழித்தவர்
காம அரி = மன்மதனை அழித்தவர்
திரி புராரி = மூன்று புரங்களை அழித்தவர்
தீ ஆடி = நெருப்பு அபிஷேகம் கொள்பவர்
கயிலையாளி = கயிலை மலை இறைவர்
காபாலி = பிரம கபாலத்தைக் கையில் கொண்டவர்
கழை யோனி = மூங்கில் அடியில் தோன்றியவர்

கர உதாசன ஆசாரி பரசு பாணி பானாளி
கணமொடு ஆடி கா யோகி சிவ யோகி

கர உதாசன = கையில் நெருப்பை ஏந்திய
ஆசாரி = தலைவர்                         
பரசு = மழுவை
பாணி = கையில் உடையவர்        
பானாளி = நள்ளிருளை உகந்தவர்
கணமோடு ஆடி = பேயுடன் ஆடுபவர்
கா யோகி = யோகத்தை உடலாகக் கொண்டவர்.
சிவ யோகி = சிவ யோகி

பரம யோகி மா யோகி பரி அரா ஜடா சூடி
பகர் ஒணாத மா ஞானி பசு ஏறி

பரம யோகி = பரம யோகி  
மா யோகி = மகா யோகி
பரி அரா ஜடா முடி = பெரிய பாம்பைச் சடையில் சூடியவர்
பகர் ஒணாத = சொல்லுதற்கு அரிய
மா ஞானி = மகா ஞானி
பசு ஏறி = இடப வாகம் உடையவர்

பரதம் ஆடி கான் ஆடி பர(ம) வயோதிக அதீத
பரம ஞான ஊர் பூத அருளாயோ

பரதம் ஆடி = கூத்து ஆடுபவர்
கான் ஆடி = சுடு காட்டில் ஆடுபவர்
பர = மேலானவர்
வயோதிக அதீத=  மூப்பைக் கடந்தவர் (ஆகிய)
பரம = பரம சிவபெருமானது
ஞான ஊர் = ஞான நிலையில்
பூத (புகுத) = புகும்படி
அருளாயோ = அருள் செய்ய மாட்டாயோ?

சுருதி ஆடி தாதாவி வெருவி ஓட மூதேவி
துரக கோப மீது ஓடி வட மேரு

சுருதி ஆடி = வேதங்களை ஓதும்
தாதா = தந்தையாகிய பிரமன்
வி = மிகவும்
வெருவி ஓட = பயந்து ஓடவும்
மூதேவி துரக = மூதேவி அகன்று ஓடவும்
கோபம் மீதோடி = கோபம் மிகவும் கொண்டு
வட மேரு = வடக்கே உள்ள மேருமலை 

சுழல வேலை தீ மூள அழுது அளாவி வாய் பாறி
சுர(த்)தினோடு சூர் மாள உலகு ஏழும்

சுழல = சுழன்று கலங்கவும்
வேலை தீ மூள = கடல் தீக் கொளுத்தவும்
அழுது அளாவி = அழுகை கலந்து
வாய் பாறி = வாய் கிழியும்படி
சுரு(த்)தினோடு = பேரொலியுடன்
சூர் மாள = சூரன் இறக்கவும்
உலகு ஏழும் = ஏழு உலகங்களும்

திகிரி மாதிர ஆவார திகிரி சாய வேதாள
திரளினோடு பாறோடு கழுகு ஆட

திகிரி மாதிர ஆவார திகிரி = வட்டமாகிய திக்குகளை மறைக்கின்ற சக்ரவாளகிரி
சாய = சாய்ந்து அழியவும்
வேதாள திரளினோடு = பேய்க் கூட்டங்களோடு.
பாறோடு = பருந்தும்.                             
கழுகு ஆட = கழுகும் ஆட. 

செருவில் நாடு வான் நீப கருணை மேருவே பார
திரு விராலியூர் மேவு பெருமாளே.

செருவில் நாடு = போரை நாடிச் சென்ற
வான் நீப = பரிசுத்தமான கடப்ப மாலையை அணிந்தவனே
கருணை மேருவே = கருணை மலையான மேருவே
பார = பெருமை வாய்ந்த
திரு விராலி ஊர் = அழகிய விராலியூரில்
மேவு பெருமாளே =வீற்றிருக்கும் பெருமாளே
                   அதீத பரம ஞான ஊர் பூத அருளாயோ

சுருக்க உரை

யானையின் உடலை அழித்தவரும், திரிபுரம் எரித்த கயிலை மலைத் தலைவரும், பெரிய யோகியும், சுடு காட்டில் நள்ளிருளில் ஆடுபவரும் ஆகிய சிவ பெருமானின் ஞான நிலையில் நான் புகும்படி அருள மாட்டாயோ?

மேரு மலை கலங்கவும், கடல் தீக் கொளுத்தவும், சூரன் இறக்கவும், பேய்கள், பருந்துகள், கழுகுகள் ஆட போரை நாடிச் சென்று பரிசுத்தமான கடப்ப மாலையை அணிந்தவனே, கருணை மேருவே, பெருமை வாய்ந்த திருவிராலி என்னும் ஊரில் வீற்றிருக்கும் பெருமாளே, நான் பரம ஞான இடத்தில் புகும்படி அருள மாட்டாயோ?

விளக்க குறிப்புகள்

கரிபுராரி:  கரி புர அரி – தாருகாவனத்து முனிவர்கள் அபிசார ஹோமம் செய்து அனுப்பிய யானையை உரித்துச் சிவபிரான் தன் ஆடையாக அணிந்தார்




                                 கரிபுராரி - கஜ சம்காரமூர்த்தி

ஒப்புக

1. பரதமாடி............
பரதத்தை யடக்கி நடிப்பவர்
த்ரிபுரத்தை யெரிக்க நகைப்பவர்
பரவைக்குள் விடத்தை மிடற்றிடு பவர் ------------------ திருப்புகழ், புருவத்தை

2. கானாடி........
தோடு ஓர் காதினன் பாடு மறையினன்
காடு பேணி நின்று ஆடும் மருதனே ------------------------- சம்பந்தர் தேவாரம்.

3. சுருதி ஆடி தாதா.....
சுருதியான் தலையும் நாமகள் மூக்கும் சுடரவன் கரமும் முன் இயங்கு
பருதியான் பல்லும் இறுத்து அவர்க்கு அருளும் பரமனார்..
-------------- சம்பந்தர் தேவாரம்
4. வடமேரு சுழல வேலை தீமூள.....
காலுக்கு அணிகலம் வானோர்
முடியும் கடம்பும்கேயில்
வேலுக்கு அணிகலம் வேலையும்
சூரனும் மேருவுமே-------------------------------------------------கந்தர் அலங்காரம் 






No comments:

Post a Comment

Your comments needs approval before being published