Wednesday 25 June 2014

267.பாலோ தேனோ

267
திருவாரூர்

       தானா தானா தனதன தனதன
       தானா தானா தனதன தனதன
       தானா தானா தனதன தனதன  தனதான

பாலோ தேனோ பலவுறு சுளையது
   தானோ வானோர் அமுதுகொல் கழைரச
   பாகோ வூனோ டுருகிய மகனுண          வருண்ஞானப்
பாலோ வேறோ மொழியென அடுகொடு
   வேலோ கோலோ விழியென முகமது
   பானோ வானூர் நிலவுகொ லெனமகண்  மகிழ்வேனை
நாலாம் ரூபா கமலஷண்  முகவொளி
   யேதோ மாதோம் எனதகம் வளரொளி
   நானோ நீயோ படிகமொ டொளிரிட         மதுசோதி
நாடோ வீடோ நடுமொழி யெனநடு
   தூணேர் தோளோ சுரமுக கனசபை
   நாதா தாதா எனவுரு கிடஅருள்               புரிவாயே
மாலாய் வானோர் மலர்மழை பொழியவ
   தாரா சூரா எனமுநி வர்கள்புகழ்
   மாயா ரூபா அரகர சிவசிவ                  எனவோதா
வாதா டூரோ டவுணரொ டலைகடல்
   கோகோ கோகோ எனமலை வெடிபட
   வாளால் வேலால் மடிவுசெய் தருளிய    முருகோனே
சூலாள் மாலாள் மலர்மகள் கலைமகள்
   ஓதார் சீராள் கதிர்மதி குலவிய                           
   தோடாள் கோடா ரிணைமுலை குமரிமுன் அருள்பாலா
தூயா ராயார் இதுசுக சிவபத
   வாழ்வா மீனே வதிவமெ னுணர்வொடு
   சூழ்சீ ராரூர் மருவிய இமையவர்          பெருமாளே 


பதம் பிரித்து உரை

பாலோ தேனோ பல உறு சுளை அது
தானோ வானோர் அமுது கொல் கழை ரச
பாகோ ஊனோடு உருகிய மகன் உண் அருள் ஞான

பாலோ தேனோ = பாலோ, தேனோ பல உறு = பலாப் பழத்தில் உள்ள சுளை அது தானோ = சுளை தானோ வானோர் அமுது கொல் = தேவர்கள் உண்ணும் அமுதம் தானோ கழ ரச பாகோ = கரும்பு ரச வெல்லப் பாகோ ஊனோடு உருகிய = ஊன் உருகப் பாடிய மகன் = பாலனாகிய (திருஞான சம்பந்தர்) உண் = உண்ணும்படி அருள் = (உமா தேவியார்) அருளிய ஞானப் பாலோ = ஞானப் பால் தானோ

பாலோ வேறோ மொழி என அடு கொடு
வேலோ கோலோ விழி என முகம் அது
பானோ வான் ஊர் நிலவு கொல் என மகள் மகிழ்வேனை

வேறோ = வேறு ஏதாவதோ மொழி என = (மகளிரின்) மொழி என்றும் அடி கொடு = கொல்லுதலைக் கொண்ட வேலோ = வேலோ கோலோ = அம்பு தானோ விழி என = (அம்மாதர்களின்) கண்கள் என்றும் முகம் அது பானோ = முகம் சூரிய ஒளியதோ வான் ஊர் நிலவு கொல் என = ஆகாயத்தில் ஊர்ந்து செல்லும் சந்திர ஒளியோ என்றும் மகள் = பெண்கள் பால் மகிழ்வேனை = மகிழிச்சி கொள்ளும் நான்

நாலாம் ரூபா கமல ஷண்முக ஒளி
ஏதோ மா தோம் எனது அகம் வளர் ஒளி
நானோ நீயோ படிகமொடு ஒளிர் இடம் அது சோதி


நாலாம் ரூபா = பல உருவமும் கொண்ட உருவமுடையவனே கமல = தாமரை போன்ற ஷண்முக ஒளியே = ஆறு முக ஒளியே ஏதோ = வேறு எதுவோ மா = பெரிய தோம் = குற்றம் கொண்ட எனது அகம் = என்னுடைய மனத்தில் வளர் ஒளி = வளர்கின்ற சோதியே நானோ நீயோ படிகம் ஒடு ஒளிர் = நானோ நீயோ பளிங்கு போல் விளங்கும் இடம் அது சோதி = இடம் அது ஒரு சோதி மயமானது

நாடோ வீடோ நடு மொழி என நடு
தூண் நேர் தோளோ சுர முக கன சபை
நாதா தாதா என உருகிட அருள் புரிவாயே

நாடோ வீடோ = (அது) நாடு தானோ அல்லது மோட்ச வீடோ நடு மொழி என = நடு நிலைமையான உண்மை மொழி என்று வேண்டி நடு தூண் = நடுவில் உள்ள தூணுக்கு நேர் தோளோ = சமமான தோள்களை உடையவனே சுர முக = தேவர்கள் முன்னிலையில் கன சபை = பெருமை தங்கிய சபையில் விளங்கும் நாதா = நாதனே தாதா = கொடை வள்ளலே என உருகிட = என்று என் மனம் உருகுமாறுருள் புரிவாயே = திருவருள் புரிவாயாக

மாலாய் வானோர் மலர் மழை பொழி அவதாரா
சூரா என முநிவர்கள் புகழ்
மாயா ரூபா அரகர சிவசிவ என ஓதா

மாலாய் = காதல் பூண்டவராய் வானோர் = தேவர்கள் மலர் மழை பொழிய = பூமாரி பொழிய அவதாரா = பூமியில் அவதாரம் செய்தவனே சூரா = சூரனே என முனிவர்கள் புகழ் = முனிவர்கள் புகழும் மாயா ரூபா = மாயா ரூபனே அரகர என ஓதா = அரகர சிவசிவ என்று உன்னை ஓதாமல்

வாதாடு ஊரோடு அவுணரோடு அலை கடல்
கோ கோ கோ கோ என மலை வெடி பட
வாளால் வேலால் மடிவு செய்து அருளிய முருகோனே


வாதாடு அவுணரோடு = வாதாடி நின்ற அவுணர்களும் ஊரோடு = அவர்கள் ஊரில் இருந்தவர்களும் அலை கடல் = அலை கடலும் கோகோகோகோ என = கோகோ என்று அலறவும் மலை வெடி பட = (கிரவுஞ்சமும், எழு மலைகளும்) வெடி பட்டுப் பொடியாகவும் வாளால் வேலால் = வாளாலும், வேலாலும் மடிவு செய்து அருளிய = அவர்களை அழிவு செய்து அருளிய முருகோனே = முருகனே

சூலாள் மாலாள் மலர் மகள் கலைமகள்
ஓது ஆர் சீராள் கதிர் மதி குலவிய
தோடு ஆள் கோடு ஆர் இணை முலை முன் அருள் பாலா

சூலாள் = துர்க்கை மாலாள் = திருமாலுக்கு உரியவள் மலர் மகள் = பூ மகளாகிய இலக்குமி கலை மகள் = சரஸ்வதி ஓது ஆர் = இவர்கள் ஓதி நிற்கும் சீராள் = சீர் படைத்தவள் கதிர் மதி குலாவிய = ஒளி வீசும் நிலவின் ஒளி கொண்ட தோடாள் =  தோடு என்னும் அணி கலனை அணிபவள் கோடு ஆர் = மலை போன்ற இணை முலை குமரி = இரண்டு கொங்கைகளை உடைய உமா தேவியார் முன் = முன்பு அருள் பாலா = அருளிய குழந்தையே

தூயார் ஆயார் இது சுக சிவ பத
வாழ்வாம் ஈனே வதிவம் எனு(ம்) உணர்வொடு
சூழ் சீர் ஆரூர் மருவிய இமையவர் பெருமாளே


தூயார் = பரிசுத்தமானவர்கள் ஆயார் = (உன்னைத்) தியானிப்பவர்கள் இது சிவ பத வாழ்வாம் = (இந்தத் திருவாரூர் வாழ்வே) சுகமான சிவ பத வாழ்வு ஈனே வதிவம் = இங்கேயே தங்கி வாழ்வோம் எனும் உணர்வோடு = என்னும் ஞான உணர்ச்சியோடு சூழ் = வந்து சூழ்கின்ற சீர் ஆரூர் மருவிய = சிறப்புள்ள திருவாரூரில் சேர்ந்துள்ள இமையவர்கள் பெருமாளே = தேவர்கள் பெருமாளே

சுருக்க உரை

பால், தேன், பலாச்சுளை, அமுதம், வெல்லப்பாகு தானோ, உள்ளம் உருகப் பாடிய ஞான சம்பந்தர் உண்ணும்படி உமா தேவியார் அருளிய ஞானப் பால் தானோ, வேறு ஏதாவதோ என்னும்படி இனிக்கும் பேச்சுக்களை உடைய விலை மாதர்களின் பால் மகிழும் நான், உன்னை நினைத்து, பல உருவம் கொண்டவனே, தாமரை போன்ற ஆறு முகத்தனே குற்றம் நிறைந்த உள்ளம் படைத்த என் மனதில் வளரும் சோதி ஒரு நாடோ அல்லது மோட்ச வீடோ உண்மையான உபதேசம்  வேண்டும் எனக்கு நாதானே, கொடை வள்ளலலே என் மனம் உருகுமாறு திரு அருள் புரிவாயாக

தேவர்கள் பூமாரி பொழிய உலகில் தோன்றியவனே அரகர சிவசிவ என்று ஓதாமல் நின்ற அவுணர்களும், அலை கடலும், மலைகள் பொடிபட அவர்களை அழித்தவனே இலக்குமியும், சரஸ்வதியும் ஓதி நிற்கும் சீர் படைத்த உமா தேவி அருளிய முருகனே பரிசுத்தமானவர்கள் வாழும் திருவாரூரிலேயே தங்கி வாழ்வோம் என்ற ஞான உணர்ச்சியோடு சிறப்பு மிக்க திருவாரூரில் வீற்றிருக்கும் தேவர்கள் பெருமாளே நான் உள்ளம் உருகி உன்னைப் பாட அருள் புரிவாயாக

விளக்கக் குறிப்புகள்

1 நாலாம் ரூபா

ஒன்றாய் இரு திறமாய்அளப்பிலவாய்
நின்றாய் சிவனேயிந் நீர்மை யெலாம் தீங்ககற்றி
நன்றாவி கட்கு நலம் புரிதற் கேயன்றே                                கந்த புராணம்  

2 வானோர் மலர் மழை பொழியவ

அயனும் மாலும் வான்திகழ் மகத்தின் தேவும்
முநிவரும் மலர்கள் தூவி ஏன்றெமை அருளு கென்றே
ஏத்திசை எடுத்துச் சூழ்ந்தார்                                                கந்த புராணம்  




No comments:

Post a Comment

Your comments needs approval before being published